பயங்கரவாதி ஹஃபீஸ் சையத்தை விடுவித்ததற்கு பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்
பயங்கரவாதி ஹஃபீஸ் சையத்தை விடுவித்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்க்டன் : மும்பைத் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி ஹஃபீஸ் சையத்தை வீட்டுக்காவலில் இருந்து விடுவித்த பாகிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இந்தத் தீவிரவாதத் தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல் சம்பங்களில் தொடர்புடைய பயங்கரவாதியும், ஜமாத் உத் தவா என்கிற தீவிரவாத இயக்கத்தின் தலைவருமாகிய ஹஃபீஸ் சையத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து பயங்கரவாதி ஹஃபீஸ் சையத் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. தற்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும், பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளை ஒழித்து வருவதாக கூறிக்கொண்டாலும் தனது நாட்டில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துவருவது உலக நாடுகள் பலவற்றிற்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஹஃபீஸ் சையத்தின் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாகிஸ்தான் உடனான உறவில் சிக்கல் ஏற்படும் என்றும், அதற்கான பின்விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் என்று வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயங்கரவாதி ஹஃபீஸ் சையத்தின் தலைக்கு அமெரிக்க அரசு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. மேலும், 2008ம் ஆண்டே உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விளைக்கும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹஃபீஸ் சையத்தின் பெயரை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.