தற்காலிக நிதி மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்து .. 69 மணி நேர அரசுத் துறை முடக்கத்திற்கு தீர்வு!
தற்காலிக நிதி மசோதாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து அரசுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
நியூயார்க்: தற்காலிக நிதி மசோதாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து 69 மணி நேரத்திற்குப் பிறகு அரசுப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டது. பிப்ரவரி 16-ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான வாக்குகளை செனட் சபையில் பெற இயலவில்லை.
எல்லை பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவில் குடியேறியவர்களின் பாதுகாப்பு தொடர்பான தங்களது விருப்பத்துக்கு அரசு மதிப்பளிக்காததால் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமெரிக்காவில் அரசுப் பணிகள் முடங்கியது.
69 மணி நேர முடக்கம்
சுமார் 69 மணி நேரமாக தொடர்ந்து அரசுப் பணிகள் முடங்கியது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
தற்காலிக மசோதாவுக்கு ஒப்புதல்
எனவே, அரசுப் பணிகள் தொய்வின்றி நடத்துவதற்காக தற்காலிக நிதி அளிக்கும் மசோதா நேற்று கொண்டு வரப்பட்டது. இதற்கு செனட் சபையும் அந்நாட்டு நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆதரவாக வாக்குகள்
இந்த மசோதாவுக்கு ஆதரவாக செனட் சபையில் 81 பேர் வாக்களித்தனர். எதிர்த்து 18 பேர் வாக்களித்தனர். அதேசமயம் இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் ஆதரவாக 266 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் பெற்றது.
கையெழுத்திட்ட ட்ரம்ப்
இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்நது அதிபர் டிரம்ப்பின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
தடங்கல் இன்றி நடைபெறும்
இதையடுத்து அரசுப் பணிகள் முடக்கம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. தற்போதைய நிதி இரண்டரை வாரங்களுக்கு, அதாவது பிப்ரவரி 8-ம் தேதி வரை மட்டுமே உள்ளது. எனவே, அதுவரை அரசுப் பணிகள் எந்த தடங்கலும் இன்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.