அமெரிக்க அதிபர் தேர்தலைச் சீர்குலைக்க விக்கிலீக்ஸ், ரஷ்யா சதி! – ஹிலரி குற்றச்சாட்டு
லாஸ் வேகஸ்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க ரஷ்யா சதித்திட்டம் தீட்டியுள்ளது. விக்கி லீக்ஸும் அதற்கு உடந்தையாகச் செயல்படுகிறது என்று ஹிலரி க்ளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
லாஸ் வேகஸ் நகரில் உள்ள நெவடா பல்கலைக் கழகத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் இறுதி விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தில் பேசிய ஹிலரி, ரஷ்யா மீது கடுமையாக குற்றம் சாட்டினார்.
ரஷ்யாவின் சதித்திட்டம்
அமெரிக்க சர்வர்களை ஹேக் செய்து, தகவல்களை திருடி விக்கிலீக்ஸ் மூலம் வெளியிடுகிறார்கள். நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலான விசயமாகும். இதை அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும். ஆனால் ட்ரம்ப் ரஷ்ய அதிபர் புட்டினுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்.
ரஷ்யாவுடன் அவருக்குள்ள பிசினஸ் தொடர்புகளுக்காக நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கப் பார்க்கிறார் ட்ரம்ப் என்றும் குற்றம் சுமத்தினார்.
மறுத்துப் பேசிய ட்ரம்ப், புட்டின் யாரென்றே எனக்கு தெரியாது. அவருக்கும் எனக்கும் எந்த சம்மமந்தமும் இல்லை என்றார்.
மேலும் பேசுகையில் ஜப்பான், சவுதி அரேபியா , தென் கொரியா போன்ற நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அமெரிக்காவின் பணமும் வளமும் தேவையில்லாமல் வீணாகிறது என்று ட்ரம்ப் கூறினார்,
அந்த நாடுகளின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கே ட்ரம்ப் உலை வைக்கிறார். நட்பு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்பிற்கு துணை நிற்போம் என்று ஹிலரி தெரிவித்தார்
மெக்சிகோவுக்கு சுவர் பரிசு
மெக்சிகோவுடன் உள்ள தெற்கு எல்லையில் சுவர் எழுப்புவதைத் தவிர வேறு வழியில்லை. கட்டாயம் கட்டியே தீரவேண்டும் என்று ட்ரம்ப் சொன்னார்.
அனைத்து வளத்தையும் ஆக்கப்பூர்வமான திட்டங்களும் செயல்களுக்கும் உபயோகிக்கவேண்டும். எல்லையைப் பாதுகாக்க வேண்டும். அதை நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் செய்யவேண்டும். சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 11 மில்லியன் மக்களைத் திருப்பி அனுப்புவது என்பது சாத்தியமில்லாதது. ட்ரம்ப் போன்றவர்கள் அவர்களை வெளியே வரவிடாமல் தடுத்து அவர்களை ஏமாற்றி குறைந்த சம்பளத்திற்கு வேலை வாங்கி கொடுமைப் படுத்துகிறார்கள்.
அவர்களை அனைவரும் சட்டபூர்வமாக வெளியே சுதந்திரமாக வரும்போது பொருளாதாரம் வலிமை அடையும். அதே சமயத்தில் குற்றப் பின்னணி உள்ளவர்களை தொடர்ந்து வெளியேற்ற வேண்டும் என்று ஹிலரி கூறினார்.
தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. நாட்டு மக்கள் முன்பு நேரடியாகப் பேசக்
கிடைத்துள்ள கடைசி வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் மனதை திருப்பும் முயற்சியில் இருவரும் கடும் போட்டியுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
- அமெரிக்காவிலிருந்து இர தினகர்