அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி.. யார் வென்றால் இந்தியாவிற்கு சாதகம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு சாதகம் யார் வெற்றி பெற்றால் பாதகம் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
வாஷிங்கடன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்டது. அதிபராக யார் வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இருவரும், அணு பயன்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்து அமெரிக்க இந்திய உறவு என்பது மிகவும் ஆழமாகவே இருந்து வருகிறது. இந்த ஆழமான உறவில் தற்போது நடைபெற உள்ள தேர்தல் வெற்றி பாதகத்தை ஏற்படுத்துமா அல்லது உறவை மேம்படுத்துமா என்பது நம் முன் இருக்கும் கேள்வி.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் குடிபெயர்ந்து அமெரிக்காவில் வாழ்பவர்கள் குறித்து அதிகம் பேசினார். குறிப்பாக, தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் இருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் வாழும் மக்கள் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் மிக மோசமான வார்த்தைகளில் பிரச்சாரத்தின் போது பேசினார்.
ஆனால். அதே நேரத்தில் அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஹிலாரி கிளிண்டன் தேர்தல் பிரச்சாரத்தின் போது கிரீன் கார்ட் கொடுப்பது தொடர்பாக பேசியிருந்தார். ஹிலாரியின் இந்தப் பேச்சு இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் தங்கிப் படிக்கும் 1 லட்சத்து 32 ஆயிரத்து 888 இந்திய மாணவர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் குடியேறுபவர்கள் தொடர்பாக இன்னும் மிகக் கடுமையாக பேசி வருகிறார்.
அரசியல் ரீதியாக பார்த்தோமானால், பாகிஸ்தான் ஆதரவு நிலையில் முழுமையாக டொனால்ட் நின்று பேசாமல் இந்தியாவின் பக்கம் கொஞ்சம் சாய்வது போன்று பேசி வருகிறார். பிரச்சாரக் கூட்டங்களில் இந்தியாவை மிகவும் பிடிக்கும், இந்துக்களை நிறைய பிடிக்கும் என்றெல்லாமும் டொனால்ட் பேசி வருகிறார். ஹிலாரி கிளிண்டனை பொருத்தவரை, பல்வேறு வகைகளில் இந்தியாவுடன் மிக நெருக்கமாகவே அவர் இருந்து வருகிறார்.
இருவரும் பிரச்சாரத்தின் போது, இந்தியர்களுக்கு அல்லது இந்தியாவிற்கு சாதகமான விஷயங்களை பேசி வருகின்றனர். என்றாலும், அமெரிக்காவிற்கு என்று அயல்நாட்டு உறவு குறித்த கொள்கை, எதிர்ப்பார்ப்பு, நலன்கள் இருக்கின்றன. அதிபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவைகள்தான் அதிபர்களை வழி நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.