தேவ்யானியை கைது செய்ய வாரண்ட்: அமெரிக்க உத்தரவு
நியூயார்க்: இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி கோப்ரகடே மீதான, விசா முறைகேடு குற்றச்சாட்டை நியூயார்க் நீதிமன்றம், ரத்து செய்த நிலையில் அமெரிக்க அரசு அவர் மீது கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின், நியூயார்க் நகரில் உள்ள, இந்திய தூதரகத்தில், துணை தூதராக, தேவ்யானி கோப்ரகாடே, 39, என்ற, பெண் ஐ.எப்.எஸ்., அதிகாரி பணியாற்றினார்.
இவரது வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு, 'விசா' பெறுவதற்காக, மோசடியான, சில சான்றிதழ்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில், தேவ்யானியை, அமெரிக்க போலீஸ், கடந்த டிசம்பரில், கைது செய்தது. கைவிலங்கிடப்பட்ட நிலையில், சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட தேவ்யானியின், உடைகளை களைந்து, போலீசார் சோதனை செய்தனர். அவரை, பயங்கர குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறையில் அடைத்து விசாரணை நடத்தினர்.1.5 கோடி ரூபாய் செலுத்திய பின், ஜாமினில், தேவ்யானி விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேவயானி ஐ.நா., வுக்கு மாற்றப்பட்டார்.
தேவ்யானி மீதான, விசா முறைகேடு குற்றச்சாட்டை நியூயார்க் நீதிமன்றம்,நேற்று ரத்து செய்தது. இந்நிலையில் தேவ்யானி மீது விசா மோசடி வழக்கு மீண்டும் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய வம்சாவளியை சேர்ந்த, அமெரிக்க அரசு வழக்கறிஞர், ப்ரீத் பாரா, தேவயானி மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர்தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், தேவ்யானி, தமது வீட்டுப் பணியாளான சங்கீதா ரிச்சர்டுக்கு குறைவான ஊதியம் கொடுத்து, உழைப்பைச் சுரண்டியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பணியாள் குறித்து பொய்யான தகவல்களைத் தந்து விசா பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க அரசு அவர் மீது அரஸ்ட் வாரண்ட்-ஐ பிறப்பித்துள்ளது.