7 நாட்டு முஸ்லீம்களுக்கு டிரம்ப் தடை.. யுஎஸ் விமான நிலையங்களில் மக்கள் போராட்டம் #muslimban
7 நாட்டு முஸ்லீம்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்துள்ள அதிபர் டிரம்ப்பின் செயலைக் கண்டித்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.
நியூயார்க்: 7 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வரக் கூடாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்திருப்பதற்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நியூயார்க் உள்ளிட்ட விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
நியூயார்க் ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தடை விதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவை நேசிப்பவர்களுக்கும் அமெரிக்காவை ஆதரிப்பவர்களுக்கும் மட்டுமே தங்கள் நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் அ\டாவடியாக கூறியுள்ளார். மேலும் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்த 90 நாட்களுக்கு அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளிலிருந்து புகலிடம் தேடி யார் வந்தாலும் அனுமதி அளிக்கப்படாது என்றும் அமெரிக்க அரசு கூறியுள்ளது.
11 அகதிகள் கைது
இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் புகலிடம் தேடி வந்த 11 அகதிகளை அமெரிக்க குடியேற்றத் துறையினர் கைது செய்துள்ளது பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன. நியூயார்க், வாஷிங்டனில் போராட்டங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
|
கடும் எதிர்ப்பு
நியூயார்க் ஜான் எப் கென்னடி விமானநிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை இப்படி ஒரு போராட்டம் இங்கு நடந்ததில்ல என்று பலரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
குடியேறிகள்
நாங்கள் அனைவரும் இங்கு வந்த குடியேறியவர்கள்தான் என்று அட்டையில் எழுதிய வாசகத்துடன் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இங்கு மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களிலும் இது போன்ற போராட்டம் நடந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கோர்ட் தடை
நியூயார்க் விமான நிலையத்தின் 4வது முனையப் பகுதியில் போராட்டம் நடந்தது. டிரம்ப் தவறுதலான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அவருக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறினர். இந்த நிலையில் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்த நாட்டு கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. முறையான ஆவணங்கள், விசாவுடன் வரும் யாரையும் அமெரிக்கவை விட்டு வெளியேற்றத் தேவையில்லை என்று கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
கூகுள் இணை நிறுவனர்
சான்பிரான்சிஸ்கோவில் நடந்த போராட்டத்தில் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் கூகுள் நிறுவனம் சார்பாக இல்லாமல், தனிப்பட்ட முறையில் கலந்து கொண்டதாக அவர் கூறினார். ஆனால் தானும் ஒரு அகதி என்ற அடிப்படையிலேயே அவர் பங்கேற்றதாக செய்திகள் கூறுகின்றன. 43 வயதான செர்ஜி அடிப்படையில் சோவியத் யூனியனைச் சேர்ந்தவர். மாஸ்கோவில் பிறந்தவர். அகதியாக அமெரிக்கா வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.