200 பில்லியன் டாலர் மதிப்பு சீன பொருட்களுக்கு வரி உயர்வு.. ட்ரம்ப் அதிரடி.. வெடித்தது வர்த்தக போர்!
வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு வரியை சரமாரியாக உயர்த்தி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ சீனாவிலிருந்து இறக்குமதியாகும் எல்லா பொருட்களுக்கும் வரி விதிப்பு தாறுமாறாக கூடிவிட்டது.
10% முதல் 20% வரை இந்த வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த நாட்டு வணிகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற நடவடிக்கை வருத்தமளிக்கின்றன. உரிய பதில் நடவடிக்கைகளை சீனாவும் எடுக்கும். தற்போதுள்ள பிரச்சினையை ஒத்துழைப்பு மூலமாக அமெரிக்கா தீர்க்க விரும்பும் என எதிர்பார்க்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில் சீனா உறுதி அளித்தபடி அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்கவில்லை. எனவே அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, 10ம் தேதி வரி உயர்த்தப்படும் என கூறப்பட்டிருந்தது.
தமிழுக்கு தீங்கு.. அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கி போராடுவோம்.. அரசுக்கு வைரமுத்து எச்சரிக்கை
இதையடுத்து, சீன துணை அதிபர் லியு ஹீ தலைமையிலான குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்திசர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியது. ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை. நேற்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், ட்ரம்ப் அதிரடியாக சீன பொருட்கள் மீது வரியை உயர்த்தியுள்ளார்.
*சமைக்கப்பட்ட காய்கறிகள்
*கிறிஸ்துமஸ் மின் விளக்குகள்
*வேக்வம் க்ளீனர்
*கார் உபகரணங்கள்
*இன்டர்நெட் மோடம்கள்
*குழந்தைகளுக்கான நாற்காலிகள்
இவை உள்ளிட்ட, 5,700 பொருட்களின் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த பொருளாதார போட்டி காரணமாக, உலகமெங்கும் பங்குச் சந்தையில் தீவிர தடுமாற்றம் நிலவுகிறது. அமெரிக்காவிலுள்ள முக்கிய பங்குச் சந்தைகள் இன்று 1 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்தன.