அமெரிக்காவில் மேலும் 1,88,966 பேருக்கு கொரோனா பாதிப்பு; இங்கிலாந்தில் 46,169 பேருக்கு தொற்று உறுதி
வாஷிங்டன்/ லண்டன்: அமெரிக்காவில் ஒரேநாளில் 1,88,966 பேருக்கும் இங்கிலாந்தில் 46,169 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 9,12,75,970 ஆக அதிகரித்துள்ளது. உலகின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 19,51,933.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 6,52,16,148. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒரேநாளில் 1,88,966 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 1,752 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தில் 46,169 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். இருப்பினும் மொத்த கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியாதான் 2-வது இடத்தில் உள்ளது.
அதேநேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகு கணிசமாக குறைந்தும் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 12,448 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது. மேலும் திங்கள்கிழமையன்று 166 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
பிரேசிலில் 28,043; ஸ்பெயினில் 24,631; ரஷ்யாவில் 23,315 பேருக்கும் புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் 15,046 பேருக்கும் கொலம்பியாவில் 15,003 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் ஒரே நாளில் 663 பேரும் இங்கிலாந்தில் 529 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவிலும் 502 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.