மத சுதந்திரம் குறித்து ஆய்வு செய்யும் யு.எஸ். கமிஷனுக்கு மத்திய அரசு விசா மறுப்பு
வாஷிங்டன்: மத சுதந்திரம் குறித்து ஆய்வு செய்ய இந்தியா வரவிருந்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷனுக்கு விசா அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது.
3 பேர் அடங்கிய மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் இந்தியாவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு அதிகாரிகள், மத தலைவர்கள் மற்றும் தன்னார்வலர்களை சந்தித்து மத சுதந்திரம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தது.
அந்த கமிஷன் இன்று முதல் ஒரு வாரத்திற்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டது. ஆனால் அந்த கமிஷன் இந்தியா வர மத்திய அரசு விசா அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க கமிஷனின் தலைவர் ராபர்ட் பி. ஜார்ஜ் கூறுகையில்
ஒரு ஜனநாயக நாடாகவும், அமெரக்காவுக்கு நெருக்கமான நாடாகவும் இருக்கும் இந்தியா எங்கள் கமிஷனின் சுற்றுப்பயணம் மீது நம்பிக்கை வைத்து விசா அளித்திருக்க வேண்டும். மத சுதந்திரம் இல்லாத பாகிஸ்தான், சவுதி, வியட்நாம், சீனா, பர்மா உள்ளிட்ட நாடுகள் எங்கள் கமிஷனுக்கு விசா அளித்துள்ளன.
2014ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் மத சுதந்திரம் குறைந்து வருவதாக மத அமைப்புகள், என்.ஜி.ஓ.க்கள் தெரிவித்துள்ள நிலையில் எங்கள் கமிஷன் நிச்சயம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடர்ந்து முயற்சிக்கும் என்றார்.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷனுக்கு மத்திய அரசு விசா அளிக்க மறுத்துள்ளது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக் காலத்தில் தான் முதல் முறையாக அந்த கமிஷனுக்கு விசா மறுக்கப்பட்டது.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் பல்வேறு நாடுகளுக்கு சென்று மத சுதந்திரம் குறித்து ஆய்வு செய்து ஆண்டறிக்கை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.