2016ல் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்த நாடுகள் எது தெரியுமா?
கடந்த 2016ம் ஆண்டில் உலக அளவில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3 வது இடத்தைப் பிடித்துள்ளது.
வாஷிங்டன்: கடந்த 2016ல் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முதல் இடத்தில் ஈராக்கும், 2வது இடத்தில் ஆப்கனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2016ல் உலகம் முழுவதும், 11,072 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் இந்தியாவில் 927 தாக்குதல் நடந்துள்ளன.
இது 2015ல் நடந்த தாக்குதல்களை விட 16% அதிகம். அதேபோல், பயங்கரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கையும் கடந்த 2015ம் ஆண்டை விட 17% அதிகரித்துள்ளது.
336 பேர் பலி
கடந்த வருடம் 336 பேர் இறந்துள்ளனர். 2015ல் 500 பேர் காயமடைந்த நிலையில், 2016ல் 636 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு மாறாக பாகிஸ்தானில் கடந்த 2015ல் 1,010 பயங்கரவாத சம்பவங்கள் நடந்த நிலையில், கடந்த வருடம் 734 சம்பவங்கள் நடந்துள்ளன.
நக்சலைட்டுகள்
உலகின் மோசமான தீவிரவாத அமைப்புகளில் இந்தியாவில் செயல்படும் நக்சலைட்டுகளுக்கு 3ம் இடம் கிடைத்துள்ளது. ஐஎஸ் மற்றும் தலிபான் அமைப்புகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. போகோ ஹாரம் பயங்கரவாத அமைப்பு 4வது மோசமான தீவிரவாத அமைப்பாக உள்ளது.
நக்சல் தாக்குதலில் 174 பேர் பலி
கடந்த வருடம் நக்சலைட்கள் நடத்திய 336 தாக்குதல் சம்பவங்களில் 174 பேர் கொல்லப்பட்டனர். 141 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2016ல் இந்தியாவில் காஷ்மீர், சத்தீஸ்கர், மணிப்பூர் மற்றும் ஜார்க்கண்டில் அதிகளவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்தியாவில்தான் அதிகம்
இந்தியாவில் நடந்த தீவிரவாத சம்பவங்களில் பெரும்பாலானவை நக்சலைட்டுகள் நடத்தியவை" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.