அமெ.வில் கன்னியாஸ்திரி முகாம் நடத்தி சிறுமிகளை பலாத்காரம் செய்த பாதிரியார் - பிரேசிலில் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் கன்னியாஸ்திரி முகாமில் பயிற்சி பெற வந்த சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாதிரியாரை பிரேசில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மின்னியபொலிஸ் அருகே உள்ள ஃபின்லேசன் பகுதியில் கிறிஸ்துவ மத தொண்டூழியம் செய்யவரும் இளம் பெண்களுக்கான கன்னியாஸ்திரி முகாமை நடத்தி வந்தவர் பாதிரியார் விக்டர் அர்டன் பெர்ணார்ட் (53). இவர் மீது, முகாமில் பயிற்சி பெற வந்த 13 வயது சிறுமியை சுமார் 10 ஆண்டு காலம் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, அதே முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண்ணும், தன்னையும் பாதிரியார் விக்டர் தனது 12 வயது முதல் 20 வயது வரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக புகார் தெரிவித்தார்.
மேலும், 'நான் கடவுளின் மனிதன் என்னுடன் நெருக்கமாக இருந்தால் உங்களின் கன்னித்தன்மைக்கு பாதிப்பு வராது' எனக் கூறியே விக்டர் இந்தக் கொடூரத்தை செய்து வந்தது விசாரணையில் உறுதியானது.
தொடர் புகாரைத் தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு விக்டர் தலைமறைவானார். அவர் பிடிபட்டால் அதிகபட்சமாக 30 ஆண்டு சிறை தண்டனை உறுதி என்ற நிலையில் அமெரிக்க போலீசார் அவரை வலைவீசி தேடிவந்தனர். அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாகவும் விக்டர் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இருந்து சுமார் 2100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ப்ரையாடா பிப்பா கடற்கரை பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் நேற்று விக்டரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது அவருடன் 33 வயது மதிக்கத்தக்க பிரேசில் நாட்டுப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
கைதின் போது, அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டர்கள், செல்போன்கள், பென்டிரைவ்கள் உள்ளிட்ட முக்கிய பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது பிரேசில் போலீசார் வசம் உள்ள விக்டர், விரைவில் அமெரிக்க போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.