ஏமனில் அமெரிக்க பத்திரிக்கையாளர், தென்னாப்பிரிக்க ஆசிரியரை சுட்டுக் கொன்ற அல் கொய்தா
ஏடென்: ஏமனில் பிணையக்கைதிகளாக இருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் மற்றும் தென்னாப்பிரிக்க ஆசிரியர் ஆகியோரை அல் கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
ஏமனில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்க புகைப்பட பத்திரிக்கையாளரான லூக் சோமர்ஸ்(33) என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு தலைநகர் சனாவில் இருந்து கடத்திச் சென்றனர். மேலும் ஏமனில் உள்ள தேஸ் நகரில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பியர்ரி கோர்கி மற்றும் அவரது மனைவியை அல் கொய்தா தீவிரவாதிகள் கடந்த ஆண்டு மே மாதம் கடத்தினர். அதில் பியர்ரியின் மனைவியை அவர்கள் கடந்த ஜனவரி மாதம் விடுவித்தனர்.
பியர்ரியின் மனைவியை விடுவிக்க தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய தொண்டு நிறுவனமான கிஃப்ட் ஆஃப் தி கிவர்ஸ் பியர்ரியை விடுவிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து பியர்ரியை டிசம்பர் 7 அல்லது 8ம் தேதி விடுவிக்க தீவிரவாதிகள் ஒப்புக் கொண்டனர்.
இதற்கிடையே சோமர்ஸை விடுதலை செய்ய தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தீவிரவாதிகள் அமெரிக்காவிடம் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்கா அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து ஏமன் நாட்டு ராணுவத்துடன் சேர்ந்து சப்வா மாகாணத்தில் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து தீவிரவாதிகள் சோமர்ஸ் மற்றும் பியர்ரியை சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக சோமர்ஸை விடுவிக்க அமெரிக்க, ஏமனி கூட்டுப்படைகள் கடந்த மாதமும் தீவிரவாதிகள் இருக்குமிடத்தில் தாக்குதல் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.