அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி; 13 பேர் படுகாயம்
டென்னிசி: அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் புளோரிடா மாகாணத்தில் அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது,
புளோரிடா மாகாணத்தின் போல்க் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த மாஜி ராணுவ வீரர் பிரையன் ரைலி, கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 மாத கைக் குழந்தையும் அதன் பெற்றோர்களும் கொல்லப்பட்டனர்..
மேலும் பக்கத்து வீட்டில் இருந்த 62 வயதான பெண்மணியையும் அந்த நபர் சுட்டுக் கொன்றார். குண்டு துளைக்காத கவச உடை அணிந்திருந்த மாஜி ராணுவ வீரர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் காயமடைந்தார். பின்னர், துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, காவல் துறையினரிடம் சரணடைந்தார் அந்த நபர்.
அதேபோல் வர்ஜீனியா பகுதியில் ஹெரிட்டேஜ் என்னும் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 19 வயது இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவருக்கு முகத்திலும் மாணவி ஒருவருக்கு காலின் கீழ் பகுதியிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
சென்னை ஷாக்! 5 வயது சிறுவனுக்கு சூடு வைத்து, தலையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த அக்கா
Recommended Video
இந்த நிலையில் டென்னிசி மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளது. டென்னிசி மாகாணத்தில் ஒரு சூப்பர் மார்கெட் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கண்மூடித்தமான துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்த சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.