"கே" திருமணத்திற்கு தடையை நீக்கியது அமெரிக்க உச்சநீதிமன்றம்.. அதிபர் ஒபாமா வரவேற்பு..
நியூயார்க் : அமெரிக்காவின் அனைத்து பகுதிகளில் வசிக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள தடை இல்லை என அமெரிக்க உச்சநீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழும் திருமண உறவுமுறைக்கு அமெரிக்காவில் கடந்த 2004-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. முதன்முதலாக மாசாச்சூசெட்ஸ் மாகாணத்தில் மட்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மேலும் சில மாநிலங்களில் சட்ட அங்கீகாரம் விரிவுபடுத்தப்பட்டது. எனினும், அமெரிக்காவில் உள்ள 14 மாகாணங்களில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடையை எதிர்த்து ஓரினச் சேர்க்கை பிரியர்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற அமெரிக்க அரசியலமைப்பு சட்ட கோட்பாட்டை இந்த தடை கேள்விக்குறியாக்குகின்றது. சில மாகாணங்களில் வாழ்பவர்கள் மட்டும் அனுபவிக்கும் இந்த சுதந்திரத்தையையும், உரிமையையும் பிற மாகாணங்களில் வாழும் அமெரிக்கர்களும் அடைய வேண்டும் என்பதுதான் சமநீதியாக இருக்க முடியும் என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்துவந்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. இதனால், நேற்று காலையில் இருந்து நீதிமன்றம் முன் ஆயிரக்கணக்கான ஓரினச் சேர்க்கையாளர்கள் திரண்டிருந்தனர்.
நாடு முழுவதும் வாழும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இனி திருமணம் செய்து கொண்டு சட்ட அங்கீகாரத்துடன் தம்பதியராக வாழ தடை இல்லை என நீதிபதி தீர்ப்பளித்தபோது, வெளியே நின்றிருந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் உற்சாக மிகுதியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த தீர்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்துள்ள வெற்றி என்று அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.