அமெரிக்காவில் மிஸ் இளவரசிப் போட்டி.. கை கொள்ள முடியாத அளவுக்கு பரிசுகளை வென்ற ஆராதனா!
மாடிசன், விஸ்கான்சின்: அமெரிக்காவின் மாடிசன் நகரைச் சேர்ந்த நமது வாசகர் அகிலா நாராயணன் - கார்த்திக் பாலன் தம்பதியின் மகள் ஆராதனா கார்த்திக் அங்கு நடந்த விஸ்கான்சின் மாகாண அளவிலான தேசிய அமெரிக்க மிஸ் இளவரசிப் போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார்.
விஸ்கான்சின் மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி நடைபெற்றது. 4 முதல் 6 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிதான் மிஸ் இளவரசிப் போட்டி. இதில் ஆராதனா கலந்து கொண்டார்.
ஜூன் மாதம் தொடக்க நிலைப் போட்டிகள் நடைபெற்றன. அதில் வெற்றி பெற்ற ஆராதனா மாகாண அளவிலான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
இறுதிப் போட்டி
இறுதிப் போட்டி ஆகஸ்ட் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை விஸ்கான்சின் டெல்ஸில் உள்ள சுலா விஸ்டா ரிசார்ட்டில் நடைபெற்றது. அதில் தனி அறிமுகம், நேர்காணல் மற்றும் பார்மல் உடை மேடை நடைப் போட்டி ஆகியவை கட்டாயமாக பங்கேற்க வேண்டியது. அது தவிர சில ஆப்ஷனல் சுற்றுகளும் இடம்பெற்றன. அதில் போட்டோஜெனிக் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் ஆராதனா கலந்து கொண்டார்.
5 பரிசுகள், பாராட்டுகள்
விஸ்கான்சின் மாகாண அளவில் நடந்த போட்டியில் ஆராதனாவுக்கு 5 பரிசுகள், பாராட்டுகள் கிடைத்தன. விஸ்கான்சின் மாகாண அளவிலான இறுதிப் போட்டியாளருக்கான கோப்பை ஆராதனாவுக்குக் கிடைத்தது.
ஸ்பிரிட் ஆப் அமெரிக்கா
இதுதவிர போட்டோஜெனிக் போட்டியில் கலந்து கொண்டதற்காக போர்ட்போலியோ விருது, ஸ்பிரிட் ஆப் அமெரிக்கா கோப்பை, ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் சிறந்த போட்டியாளருக்கான கோப்பை மற்றும் 75 டாலர் ரொக்கப் பரிசு, பெஜன்ட்ரி பத்திரிகை வழங்கும் ஸ்பிரிட் விருது ஆகியவை ஆராதனாவுக்குக் கிடைத்தன.
39 குழந்தைகள்
இளவரசிப் போட்டிப் பிரிவில் விஸ்கான்சின் மாகாணத்திலிருந்து மொத்தம் 39 குழந்தைகள் கலந்து கொண்டனர். இதில் வயது மற்றும் மாகாண அடிப்படையில் தலா ஐந்து பேர் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.
கலிபோர்னியாவில் பட்டப் போட்டி
இவர்கள், கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள தேசிய இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். அந்த இறுதிப் போட்டியில் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் முதலிடத்தைப் பிடிப்போர் இறுதிப் பட்டத்திற்குப் போட்டியிடுவர்.
குட்டி இளவரசியைப் பாராட்டுவோம்..!