'அமெரிக்கர்களே, ட்ரம்புக்கு ஓட்டுப் போடாதீங்க’ சியாட்டலில் கர்ஜித்த சேலத்து இளைஞர்!
சியாட்டல்(யு.எஸ்): அமெரிக்கர்களே, அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களிக்காதீர்கள் என்று அமெரிக்காவில் வசிக்கும் அடுத்த தலைமுறை தமிழ் இளைஞர் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்..
சியாட்டலில் வசித்து வரும் அறிவொளி அதியமான் என்ற இந்த தமிழ் இளைஞர், கணிணித் துறையில் எஞ்சினியரிங் முடித்து விட்டு, மைக்ரோசாஃப்ட் , டி மொபைல் உள்ளிட்ட நிறுவனங்களில் ப்ராஜக்ட் மேனஜ்மெண்டில் வேலை பார்த்து வருகிறார். சுய தொழில் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார். சியாட்டலில் உள்ள தமிழ்ப்பள்ளியில் தன்னார்வ ஆசிரியராகப் பணியாற்றி, இரண்டாம் நிலை மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தருகிறார்.
அறிவொளிக்கு அமெரிக்க அரசியல் விவகாரங்களிலும் ஆர்வம் அதிகம். சொந்தமாக தொழில் நிறுவனம் தொடங்கி வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்க அரசியலிலும் ஒரு கை பார்க்க விரும்புகிறார். தற்போதைய அதிபர் தேர்தலில், இளைஞர்கள் மத்தியிலும், டவுன் ஹால் உள்ளிட்ட கூட்டங்களிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஏன் ட்ரம்புக்கு வாக்களிக்கக் கூடாது?
தனது பரப்புரையில் டொனால்ட் ட்ரம்புக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி
வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ட்ரம்ப்க்கு எதிரான பல்வேறு வாதங்களை முன் வைத்து பேசினார்.
"நீங்கள் அமெரிக்கராக இருந்து டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களிப்பீர்கள் என்றால், செய்வது என்னவென்று தெரியாமலேயே மற்றவர்களுக்கு தீங்கு இழைக்கிறீர்கள். எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல், உங்கள் வருமானத்தை அதிகரிக்கப்போவதாக அவர் வாக்குறுதி கொடுக்கிறார்.
தன் மீது நம்பிக்கை இல்லாதவர்களை நம்பி, தேர்தல் களம் இறங்கியுள்ளார். அவர் பரவலாக பரப்பி வரும் வெறுப்புணர்ச்சியைப் பற்றி ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். வெள்ளையர்கள் அல்லாத, கருப்பின,லத்தீன், ஆசிய, இந்தியக் குழந்தைகளை எண்ணிப் பாருங்கள்.
கருப்புத் தோல் மீது ஏன் காழ்ப்புணர்ச்சி
வெள்ளைத் தோல் இல்லாதவர்களுக்கு சம உரிமை இல்லாத மிகவும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. மெக்சிகர்களை கொலையாளிகள், குற்றவாளிகள், போதை வியாபாரிகள் என்று ஒரு பக்கம் கூறிவிட்டு, இன்னொரு பக்கம் லத்தீன் இனத்தவர்களுடன் புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடுகிறார்.
சட்டபூர்வமற்ற முறையில் குடியேறியவர்களை மொத்தமாக வெளியேற்றுவோம் என்கிறார். ஐரோப்பியர்கள் அமெரிக்காவுக்குள் அப்படி வரவில்லையா என்ன? அல்லது அவர்களை வெள்ளைத் தோல் மூலம் அடையாளம் காணத்தான் முடியுமா?
உண்மையைச் சொன்னால், அமெரிக்காவில் உள்ள குழந்தைகளில் பெரும்பான்மையினர் வெள்ளையர்கள் இல்லை. இனவெறி ஹிப்போகிரஸியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தருணம் இது.
உழைப்பாளிகளைச் சாடும் ட்ரம்ப்
உழைக்கும் வர்க்கத்தினர் மீது ட்ரம்ப் கடுமையாக சாடுகிறார். நமக்கெல்லாம் உரிமையே இல்லை என்பதைப் போல் பேசுகிறார். நேரத்திற்கு ஒன்று என்று மாற்றி மாற்றி சொல்கிறார். ஒன்றுமே தெரியாத, தீவிர இன வெறி மட்டுமே கொண்டவர் நம்முடைய நம்பிக்கையை கோருகிறார்.
அமெரிக்க இஸ்லாமியர்களைக் கண்காணிக்க வேண்டுமாம்! வெள்ளையர்கள் அல்லாத அமெரிக்கர்களுக்கு தனிச் சட்டம் /உரிமைகள் என்ற பிரிவினை வாத இலக்கை நோக்கிய படு பயங்கரமான திட்டம் அது.
ட்ரம்ப் ஒரு வேளை அதிபர் ஆகிவிட்டால் மூன்றாம் உலகப்போர் நிச்சயம் என்று நம்பலாம். அவருடைய 'மேக் அமெரிக்கா க்ரேட் அகெய்ன்' என்பது பிரிவினைக்கு இட்டுச்செல்லும் முழக்கம்.
இனவெறி பிடித்த ஒருவர் சுதந்திர உலகத்தின் தலைவர் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
அமெரிக்காவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். வேகமான வளர்ச்சியும் வேண்டும். அன்பிற்குரிய அமெரிக்கர்களே தயவு செய்து டொனால்ட் ட்ரம்ப்பை அமெரிக்க அதிபர் ஆக்கி விடாதீர்கள்' என்று அறிவொளி தனது பரப்புரையில் கடுமையாக சாடியுள்ளார்.
திராவிட பாரம்பரிய வழி வந்தவராச்சே !
அறிவொளியின் தந்தை வழி தாத்தா, சேலத்தில் மிக முக்கியமான திராவிட இயக்கத் தலைவர், புலவர் கோ.வேள்நம்பி ஆவார். தமிழ் ஆசிரியரான அவர் ஆசிரியர் கூட்டணியின் தலைவராக பணியாற்றியவர். பயணம் என்ற திராவிட வரலாற்றுப் புத்தகம் உட்பட பல்வேறு புத்தகங்கள் எழுதியவர். பகுத்தறிவு கொள்கையை இறுதி வரையிலும் பின்பற்றியவர். சமீபத்தில் காலமான அவர், தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள்ஆய்வுக்கு தானமாக கொடுத்துள்ளார்.
திராவிட இயக்க கொள்கையாளர், புலவர் கோ.வேள்நம்பியின் பேரன், சமத்துவத்தை வேரறக்கும் இன வெறிக்கு எதிராக பொங்கி எழுவதில் ஆச்சரியமில்லை தானே!