இலங்கைத் தமிழர்களுக்காக அமெரிக்கத் தமிழர்கள் திரட்டிய 15 ஆயிரம் டாலர்கள்!
டல்லாஸ்(யு.எஸ்): மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 5 கி.மீ நடைபயண நிகழ்ச்சி மூலம் இலங்கையில் நடக்க இயலாமல் இருப்பவர்களுக்கு மூன்று சக்கர வண்டி வழங்கும் பணிக்காக 15,000 டாலர்கள் நிதி திரட்டப்பட்டது.
அமெரிக்காவில் இயங்கும் IMHO( www.imho.org) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு இந்த நிதி வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் வன்னி பகுதியில் முதுகு தண்டுவடம் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.
வசந்தகால வரவேற்பு
அமெரிக்காவில் குளிர் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும் வேளையில், நடை பயணம், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட வெளி அரங்கு நிகழ்ச்சிகள் மூலம் வசந்தத்தை வரவேற்பது பொதுவான வழக்கம். நம்மவர்களும் அவ்வாறே நடைபயணம், கிரிக்கெட் நிகழ்ச்சிகள் என நடத்துகின்றனர். நடைபயணம் என்பது பார்க்குகளில் குடும்பம் குடும்பமாக நண்பர்கள் உறவினர்களுடன் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஊரிலிருந்து பெற்றோர்கள் வந்திருந்தால் அவர்களுக்கும் உற்சாகம் அளிக்கும் நிகழ்வாக இருக்கிறது.
மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்
டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற 5.கி.மி நடைபயண நிகழ்ச்சியில் குழந்தைகள் உட்பட 250 பேர்களுக்கும் மேலாக கலந்து கொண்டனர். IMHO அமைப்பின் மூலம் வன்னி பகுதி இலங்கை தமிழர்களின் நலத்திட்ட உதவிக்கு என்பதனால், அனுமதிக் கட்டணம் தவிர கூடுதல் நன்கொடையும் வழங்கியிருந்தார்கள். நிகழ்ச்சிக்கு வர இயலாதவர்கள் கூட நன்கொடை அளித்துள்ளார்கள்.
உடற்பயிற்சியுடன் ஆரம்பம்
ஓட்டம், அல்லது நடை என அவரவர் விருப்பத்திற்கேட்ப, 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று, புறப்பட்ட இடத்திற்கே திரும்பும் விதமாக அமைக்கப் பட்டிருந்தது. முன்னதாக உடம்பை சரியாக தயார்படுத்துதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக முக்கிய பயற்சிகள் சில அளிக்கப்பட்டது. சாஸ்தா ஹெல்த் க்ளப்பின் உறுப்பினர்கள் தங்கள் சனிக்கிழமைப் பயிற்சியை, தமிழ்ச் சங்க நிகழ்ச்சியுடன் இணைந்து பங்கேற்று கொண்டனர். அவர்களில் தமிழர் அல்லாதவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குதூகலத்துடன் பங்கேற்பு
ஊர்ப் பக்கம் திருவிழாவுக்கு புறப்படுவது போல் நண்பர்களும், குடும்பத்தினரும் குழுக்களாக உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றார்கள். வழியெங்கும் கேலியும், கிண்டலும், உரையாடலுமாக ஒரு திருவிழா சூழல் அங்கே உருவானது. ஓட்டத்தில் பங்கெடுத்தவர்களும் அவரவர் நண்பர்களுடன் விரைவாக சென்று இலக்கை அடைந்தனர். ஆங்காங்கே தண்ணீர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
உணவும் உபசரிப்பும்
ஒடியாடி வந்தவர்களுக்கு மெதுவடை, சுண்டல், நீர் மோர், ஐஸ் காஃபி, புளியோதரை உள்ளிட்ட சிற்றுண்டிகள் மற்றும் வாழைப்பழம் போன்றவைகள் கொடுக்கப்பட்டது. இன்னொரு புறம் குழந்தைகளுக்கு முகத்தில் பெயிண்டிங் செய்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நல்ல நோக்கத்திற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி, குழந்தைகள் உட்பட அனைவருக்கும் மகிழ்ச்சியான ஒரு பிக்னிக் போலவும் அமைந்தது என்பது முக்கிய அம்சமாகும்.
திருமூலர் சொன்ன உடற்பயிற்சி
அனைவரையும் வரவேற்று பேசிய தமிழ்ச் சங்க தலைவர் கீதா அருணாச்சலம், உடற்பயிற்சி மற்றும் கொடை பற்றி தமிழர்களின் வாழ்வுமுறையை எடுத்துரைத்தார்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!''
என்னும் திருமூலரின் தருமந்திரத்தை மேற்கோள் காட்டி உடல் நலமில்லா மனிதன் எந்த ஒரு குறிக்கோளையும் அடைய முடியாது. அதனால் உடலை நன்கு பேணிக் காக்க வேண்டும். உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
கண்ணதாசன் கூறிய கொடையுள்ளம்
மேலும் பேசிய அவர், "கொடையுள்ளத்தோடு நற்பணிகளுக்கு பொருளுதவி செய்வது நமக்கு நன்மையிலே முடியும்.
"தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்" என்ற கவியரசர் கண்ணதாசனின் வைர வரிகளுக்கேற்ப, எப்போது தன்னலம் மறந்து பிறர் நலனில் அக்கரை கொள்கிறோமோ அன்று தான் வாழ்க்கையில் உண்மை இன்பத்தை அடைய முடியும். இறைவன் நமக்கு கொடுப்பதெல்லாம் நாம் பிறருக்கு கொடுப்பதற்காகவே. நாம் கொடுப்பதெல்லாம் நாம் பயனடையும் வகையில் நம்மை மீண்டும் வந்தடையும்,' என்றார்.
இந்தியாவிலும் சமூகப் பணிகள் மேற்கொள்ளும் IMHO
அமெரிக்காவில் இயங்கும் IMHO தன்னார்வ சேவை அமைப்பு இலங்கை, இந்தியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் இயற்கையினால் ஏற்படும் சீற்றங்களின் சீரமைப்புப் பணிக்கு இயன்ற அளவில் உதவி வருவதாக, அமைப்பின் டல்லாஸ் கிளை தலைவர் ஸ்ரீபிரபாகர் தெரிவித்தார். சாண்டி புயல், உத்தராஞ்சல் வெள்ளம் போன்றவற்றின் மறு சீரமைப்புப் பணியில் IMHO வின் பங்கை எடுத்துரைத்தார்.
கடந்த ஆண்டு வடக்கு டெக்சஸ் பாலவிகாஸ் மாணவர்கள் 5.கி.மி நடைபயணம் மூலம் வழங்கிய 6 ஆயிரம் டாலர்கள் (ஒன் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது), இலங்கை மகாதேவா ஆசிரமத்தின் அத்தியாவசிய கட்டிடப்பணிகளுக்கு செலவிடப்பட்டதாகவும், ஆசிரமத்தில் பிரத்தியேக கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த ஆண்டு மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அளிக்கப்படும் நிதி, நடக்க இயலாமலும், வேறு குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் இருப்பவர்களுக்கு, தங்கள் அன்றாட அலுவல்களையும், சிறு பணிகளை செய்ய உதவியாகவும் இருக்கும் வகையில் மூன்று சக்கர வண்டிகள் வழங்க இருப்பதாக தெரிவித்தார்.
15 ஆயிரம் டாலர்கள் நன்கொடை
IMHO டல்லாஸ் தலைவர் ஸ்ரீ பிரபாகரிடம், தமிழ்ச் சங்கத் தலைவர் கீதா அருணாச்சலம் 15 ஆயிரம் டாலருக்கான காசோலையை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தன், வேலு ராமன், ராம் கிருஷ்ணசாமி, சங்க பொருளாளர் தமிழ்மணி, உப செயலாளர் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் உணவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டர்கள், உறுதுணையாக இருந்த இலங்கை தமிழ்ச் சங்கம், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, சாஸ்தா ஹெல்த் க்ளப் ஆகிய அமைப்புகளுக்கும், பங்கேற்ற அனைத்து உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் தலைவர் கீதா நன்றி தெரிவித்தார்.