தமிழக விவசாயிகளுக்காக வாஷிங்டனில் தமிழர்கள் போராட்டம்… சியாட்டலிலும் நடக்கிறது!
தமிழகத்திலும் டெல்லியிலும் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்கத் தமிழர்களும் போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர்.
இன்று சனிக்கிழமை, ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணி அளவில் வாஷிங்டன் டிசி யில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பாக தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்த உள்ளார்கள்.
உள்ளூர் காவல்துறை மற்றும் பூங்கா பராமரிப்புத் துறையின் அனுமதியுடன் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
காவிரி டெல்டா பகுதியை 'பாதுகாக்கப்பட்ட விவசாயப் பகுதி'யாக அறிவிப்பு,, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு, நதிகளை தேசியமயமாக்குதல்,
மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டங்களை கைவிடுதல் என முக்கிய பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, மனுவில் மக்களிடம் கையெழுத்து வாங்கி இந்திய தூதரகம் வழியாக பிரதமருக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளார்கள்.
சிவா வெங்கட், ராஜாராமன், சுரேஷ், சதீஷ், ராமகிருஷ்ணன், அரங்க்ஸ் ஆகியோர் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
வாஷிங்டன் வட்டாரப்பகுதியில் உள்ள வர்ஜீனியா, மேரிலாண்ட், டெலவர் ஆகிய மாநிலங்களிலிருந்து பெருவாரியாக தமிழர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்கள்.
கிழக்கே அட்லாண்டிக் கடல் அருகே வாஷிங்டன் நகரில் போராட்டம் நடைபெறும் அதே நாளில், மேற்கே பசிபிக் கடல் அருகே வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல் நகரிலும் தமிழர்கள் விவசாயிகளுக்காக போராடுகிறார்கள்.
சியாட்டல் தமிழ்ச் சங்கம் சார்பில்...
சியாட்டல் தமிழ்ச் சங்கம் சார்பில் பெல்வியூ நூலகத்தில் காந்தி சிலைக்கு அருகே சனிக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறுகிறது.
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு, மக்கள் விருப்பத்திற்கு எதிராக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு,
உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி காவேரி நீர் மேலாண்மை மையம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
முன்னதாக டல்லாஸிலும், அட்லாண்டாவிலும் உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத் தக்கதாகும்.
-இர தினகர்