ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவில் திரளும் தமிழர்கள்... அமெரிக்கர்களும் ஆதரவு!
ரிச்மண்ட்(யு.எஸ்). வர்ஜீனியா மா நிலம் ரிச்மண்ட் நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்று திரண்டனர். உடன் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களும் கலந்து கொண்டு ஆதரவைத் தெரிவித்தனர்.
சமூக ஆர்வலரும் ஜல்லிக்கட்டுக்கு அமெரிக்காவில் ஆதரவு திரட்டி வருபவருமான கவிதா பாண்டியன் இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார்.
ரிச்மண்ட் டீப் ரன் பார்க் அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 100 பேர் நேரடியாக வருகை தந்திருந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.
அங்கே வந்திருந்த பிற மாநிலத்தவர்களிடம் , ஜல்லிக்கட்டு தமிழர்கள் பிரச்சனை மட்டுமல்ல, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், பஞ்சாப் என இந்தியாவின் அனேக மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நாட்டின மாடு வீர விளையாட்டுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
அந்தந்த மாநிலங்களில் பெருமளவில் நாட்டின மாடுகள் அழிந்து விட்டன. இருப்பதை கட்டிக்காக்க மத்திய அரசின் இந்த தடையை உடைத்தெரிய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.
வெளி மாநிலத்தவர்களும் விளக்கங்களைப் புரிந்து கொண்டு தங்கள் மாநிலங்களில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய உதவிகள் செய்வதாக உறுதி அளித்தனர்.
அமெரிக்காவில் 3700 பேருக்கும் அதிமானோரிடம் கையெழுத்து வாங்கி, பிரதமர் மோடிக்கு மனு வழங்கியுள்ளனர். வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது
விழிப்புணர்வு கருத்தரங்கம்
அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுப் போராளி கார்த்திகேய சிவசேனாபதியுடன் பல்வழி தொலை தொடர்பு கருத்தரங்கத்திற்கு உலகத் தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தனர். தொலைபேசி வழியாக நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
கார்த்திகேய சிவசேனாபதி, ஜல்லிக்கட்டின் தொன்மையை சிந்து சமவெளிக் காலத்துச் சின்னங்கள் உவமானத்துடன் எடுத்துக் கூறினார். அழிந்து வரும் நாட்டின மாட்டு வகைகளையும் அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
ஐ. நா சபையின் அறிவுறுத்தலில் உருவாக்கபட்டுள்ள Convention on Biological Diversity (CBD) அமைப்பின் கொள்கைகள் 1, 2, 3 படி கால்நடைகளை பராமரித்து வரும் விவசாயிகள்தான், பாரம்பரிய கால்நடைகளின் இன விருத்திக்கும், இயற்கை சுழற்சியை சரிவர பராமரிப்பதற்கும் பாத்தியமானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது இந்த கன்வென்ஷனில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ள நாடாகும்.
பாரம்பரிய கால்நடைகளின் இனவிருத்திக்கு ஜல்லிக்கட்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழி வழியாக வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்களுக்கு உரிமையானதாகும் என்றும் குறிப்பிட்டார்.
உலகத் தமிழ் அமைப்பின் துணைத் தலைவர் ரவிக்குமார் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். கார்த்திகேய சிவசேனாபதியை அறிமுகப்படுத்தினார் அமைப்பின் உறுப்பினர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். இயக்குநர் தனிகுமார் சேரன் நன்றி உரை ஆற்றினார்.
நியூயார்க் பங்குச் சந்தை காளை அருகில்....
நியூ யார்க் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் ஜல்லிக்கட்டு கவன ஈர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அங்குள்ள பங்குச்சந்தை அருகில் காளைமாட்டுச் சிலை அருகே 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்று கூடினர்.
ஜல்லிக்கட்டு என்பது எங்கோ ஏதோ ஒரு கிராமத்தில் நடக்கும் நிகழ்வு அல்ல. ஒட்டு மொத்த தமிழினத்தின் பாரம்பரிய உரிமை. கிராமம், நகரம், வெளி மாநிலம், வெளி நாடு என்று உலகெங்கும் வசிக்கும் தமிழர்களின் ஒட்டு மொத்த ஆதரவு ஜல்லிக்கட்டுக்கு உண்டு என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றாதாக ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் கூறினார்.
மேலும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பீட்டா விலங்குகளை கொன்ற குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்க போராடும் இரட்டை நிலையை அமெரிக்கர்களுக்கு வலியுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர்.
கடும் குளிராக இருந்த போதிலும் திரளாக திரண்டிருந்த தமிழர்களிடம் அந்த வழியாக சென்ற அமெரிக்கர்கள் பலரும் நின்று விவரங்களைக் கேட்டறிந்தனர். அவர்களில் பலர் வாழ்த்துக்கள் கூறி தங்கள் ஆதரவையும் தெரிவித்தார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவில் பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு, பிரதமருக்கு மனு, கருத்தரங்கம், கவன ஈர்ப்பு என பொது வெளியில் போராடத் தொடங்கியுள்ளது முக்கியமானதாகும். ஏறு தழுவல் தமிழின உரிமை என்ற முழக்கம் உலகத் தமிழர்களிடம் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
-இர தினகர்