கொரோனா உயிரிழப்பு.. இரண்டாம் உலகப் போரில் இழந்த வீரர்களைவிட அதிக மக்களை இழந்த அமெரிக்கா
வாஷிங்டன்: இரண்டாம் உலகப் போரில் இழந்த வீரர்களைக் காட்டிலும் கொரோனா காரணமாக அதிக மக்களை அமெரிக்கா இழந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள வேகமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வரை 60 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதால் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகெங்கும் தற்போதுவரை 9.6 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகப் போரைவிட அதிகம்
அமெரிக்காவில் தற்போது வரை கொரோனா காரணமாக 4,05,400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா 405,399 அமெரிக்க வீரர்களை இழந்திருந்தது. தற்போது உலகப் போரில் இழந்த அமெரிக்கர்களைவிட அதிக மக்களை அந்நாடு கொரோனாவால் இழந்துள்ளது.
பைடன் நடவடிக்கை
கொரோனா காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதன்மையானதாக அமெரிக்கா உள்ளது. உலகெங்கும் ஏற்பட்டுள்ள கொரோனா உயிரிழப்புகளில் ஐந்தில் ஒரு பங்கு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். கொரோனாவைக் கட்டுப்படுத்த பைடன் என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்பதை உலக நாடுகள் தற்போது உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. பதவியேற்பு விழாவில் பேசிய பைடன், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதே தனது முதன்மையான பணி என்று தெரிவித்திருந்தார்.
100 நாட்களில் 10 கோடி பேருக்குத் தடுப்பூசி
அமெரிக்காவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இடங்களில் மாஸ்க்களை கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவையும் அவர் பிறப்பித்தார். அதிபர் பதவியேற்ற முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.
உருமாறிய கொரோனா
உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராகத் தடுப்பூசிகள் செயல்படுமா என்பது குறித்த அச்சம் மக்களிடையே நிலவுகிறது. இருப்பினும், பிரிட்டன் கொரோனா வகைக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி வேலை செய்யும் என்று முதல்கட்ட ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. அதேநேரம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகைக்கு எதிராக ஃபைசர் தடுப்பூசி வேலை செய்யுமா என்பது குறித்த தெளிவான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1.88 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.49 கோடியாக அதிகரித்துள்ளது. உலகெங்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.