ட்ரம்ப் அரசின் தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்: கமலா ஹாரிஸ் - மைக் பென்ஸ் விவாதம்
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று நேருக்கு நேர் விவாதம் செய்து வருகின்றனர்.
நியூயார்க்: அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் இன்று நேருக்கு நேர் விவாதம் செய்தனர். சாதனைகள், வாக்குறுதிகளைப் பற்றி பாதுகாப்பான முறையில் விவாதம் நடத்தி வருகின்றனர். கொரோனா என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு பல லட்சம் உயிர்களை காப்பாற்றியுள்ளதாக கூறினார் மைக் பென்ஸ். அதே நேரத்தில் கொரோனாவை கையாண்ட விதத்தில் ட்ரம்ப் அரசு தோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டினார் கமலா ஹாரிஸ்.
அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சிசார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அதிபர் பதவிக்கு போட்டியிடும் ட்ரம்ப், ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தியுள்ள நிலையில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் மைக் பென்ஸ், கமலா ஹாரிஸ் இன்று நேருக்கு விவாதம் நடத்தினர்.
அமெரிக்காவின் சால்ட் லேக்கில் இருக்கும் உட்டா பல்கலைக் கழகத்தில் விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதம் சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தை வாஷிங்டன் தலைமை செய்தியாளர் சுசன் பேஜ் ஒருங்கிணைத்தார்.
மைக் பென்ஸ் வெள்ளை மாளிகையில் கொரோனா தொற்று இருப்பவர்களுடன் சந்தித்து இருக்கிறார். இவருக்கு கொரோனா இல்லை என்றாலும், பாதுகாப்பாக ''ப்ளக்சி கிளாஸ் ஸ்க்ரீன்'' பின்புறம் அமர்ந்து விவாதம் செய்தார்.
பாதுகாப்பான முறையில் விவாதம் நடைபெற்றது.
ட்ரம்ப் அரசின் சாதனைகள், வாக்குறுதிகள் பற்றி விவாதித்தார் மைக் பென்ஸ் கொரோனாவை ட்ரம்ப் அரசு சவாலாக எதிர்கொண்டு வருவதாக கூறினார். பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் மைக் பென்ஸ்.
அதே நேரத்தில் கமலா ஹாரிஸ் தனது விவாதத்தில் கொரோனாவை வெள்ளை மாளிகை எதிர்கொண்ட விதம் பற்றி குற்றம் சாட்டினார் கொரேனாவிற்கு 70 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், ட்ரம்ப் அரசின் தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். நேருக்கு நேர் விவாதத்தில் அனல் பறக்கிறது.