ஆஹா.. 5 வருஷ பேஸ்புக் மேட்டரை கேக்குதே டிரம்ப் அரசு.. யுஎஸ் விசா பெறுவதில் புது சிக்கல் அறிமுகம்!
அமெரிக்கா விசா வேண்டும் என்றால் இனி உங்களது ஈமெயில், சமூக வலைதள பயன்பாட்டு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று புது நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்கா விசா கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் இனிமேல் தங்களது 5 ஆண்டு சமூக வலைத்தள பயன்பாடு குறித்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல் விசா நடைமுறைகளுக்கு பல்வேறு கெடுபிடிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக எச்1பி விசாவிற்கு கடும் நிபந்தனைகள் விதித்தார், இதனால் ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்பில் சிக்கியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தற்போது சாதாரணமாக அமெரிக்க செல்ல விசா பெறவும் கடும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் டிரம்ப் தற்போது விதித்துள்ளார்.
5 ஆண்டு விவரம்
இதன்படி இனி விசா கோரி விண்ணப்பிப்போர் தங்களது ஈமெயில் விவரங்கள், சமூக வலைதள பயன்பாடு குறித்த 5 ஆண்டு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு காரணமாகவே இது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக ட்ரம்ப் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
15 ஆண்டு வாழ்க்கைத் தகவல்
மேலும் தற்போதுள்ள பாஸ்போட் மற்றும் அதற்கு முன் பாஸ்போர்ட் எடுத்திருந்தால் அதன் எண்கள் மற்றும், வீடு, இதுவரை பணியாற்றி நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் என்று 15 ஆண்டு வாழ்க்கைத் தகவலையும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சிக்கல்
அரசு அறிவித்துள்ள இந்த விவரங்களைத் தர மறுப்பவர்களின் விசா நடைமுறைகள் தாமதப்படுத்தப்படவோ அல்லது நிராகரிக்கப்படவோ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய விசா நடைமுறை கல்விக்காக மற்றும் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா செல்ல விரும்பும் மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அனைத்துத் தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதிக கெடுபிடிகள்
சான்பிரான்சிஸ்கோவை மையமாக கொண்டு செயல்படும் ஈரான் அமெரிக்க பார் சங்க தலைவரும், பிரபல வழக்கறிஞருமான பாபக் யூசுப் சாதேஷ் "விசா நடைமுறையில் உள்ள புதிய கேள்விகள் மூலம் குடியுரிமை அதிகாரிகளுக்கு அதிகப்படியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே அமெரிக்காதான் விசா வழங்க அதிக கெடுபிடிகளை கடைபிடிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.