பொதுமக்களுக்கு எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் - விமானம் மூலமாக மோசூல் நகரில் வீசும் அமெரிக்கா
பாக்தாத்: ஈராக்கின் மோசூல் நகரில் ஆயிரக்கணக்கான எச்சரிக்கைத் துண்டுப் பிரசுரங்களை அமெரிக்கப் படையினர் விமானம் மூலம் போட்டுள்ளனர்.
மோசூல் நகர் முழுவதும் இந்தத் துண்டுப் பிரசுரங்களை அமெரிக்கப் படையினர் போட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் இந்த நகரை தீவிரவாதிகள் கைப்பற்றினர் என்பது நினைவிருக்கலாம்.
அமெரிக்கா விமானம் மூலமாக தூவியுள்ள அந்த துண்டுப் பிரசுரங்களில், அமெரிக்க விமானப்படையினர் முக்கியப் பகுதிகளில் விமானத் தாக்குதலில் ஈடுபடலாம் என்றும் எனவே அப்படிப்பட்ட இலக்குகளில் பொதுமக்கள் இருக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் முக்கியப் பகுதிகளை விட்டு விலகியிருக்குமாறும், அமெரிக்கப் படையினர் விமானத் தாக்குதலில் ஈடுபடப் போவதால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடமாடும் பகுதிகளைத் தவிர்க்குமாறும் ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் அந்த பிரசுரங்களில் அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில் வீடுகளில் பொதுமக்கள் தங்க வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களுக்குப் போய் விடுமாறும் ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுளளது.
ஈராக்கின் 2வது பெரிய நகரம் மோசூல். இந்த நகரை கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி தீவிரவாதிகள் கைப்பற்றினர். தற்போது இதை மீட்க அமெரிக்க விமானப்படையினர் பெரிய அளவில் களம் இறங்கவுள்ளனர் என்பது இதன்மூலம் தெரிகிறது.