மத வெறி... இந்தியரை ரயில் முன்பு தள்ளிவிட்ட யு.எஸ். பெண்ணுக்கு 24 ஆண்டு சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் மத துவேஷத்தால் சுனந்தோ சென் என்ற இந்தியரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்ணுக்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுனந்தோ சென்(46) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள க்வீன்ஸ் பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் கொலம்பியா பல்கலைக்கழகம் அருகே சொந்தமாக அச்சகம் வைத்து நடந்தி வந்தார். பெற்றோரை இழந்த அவர் திருமணமாகாதவர். அவர் க்வீன்ஸ் பகுதியில் சிறிய அபார்ட்மென்ட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி அவர் நியூயார்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது ரயில் வரும்போது எரிகா மெனன்டெஸ்(33) என்ற அமெரிக்க பெண் அவரை ரயிலில் தள்ளிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சென் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் எரிகாவை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தனது இந்துக்களும், முஸ்லீம்களும் பிடிக்காததால் அவ்வாறு செய்ததாக தெரிவித்தார். 9/11 தாக்குதலுக்கு பிறகு இந்துக்களையும், முஸ்லீம்களையும் காயப்படுத்த விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த க்வீன்ஸ் உச்ச நீதிமன்ற நீதிபதி கிரகரி லசாக் எரிகாவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.