வடகொரியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம்... அமெரிக்க மக்களுக்குத் தடை போட்டது டிரம்ப் அரசு
சுற்றுலா மேற்கொள்ளும் அமெரிக்கர்கள் வடகொரியாவுக்கு செல்லக் கூடாது என்று அதிபர் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்கர்கள், சுற்றுலாவுக்காக யாரும் வடகொரியாவுக்குச் செல்லக் கூடாது என்று அதிபர் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இருந்து வடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற ஓட்டோ வார்ம்பியர் என்ற ஆராய்ச்சி மாணவர், அங்குக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட போதும், கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அமெரிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்கர்கள் யாரும் வட கொரியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார். இதனால் வடகொரியாவுக்குச் சுற்றுலா செல்லும் அமெரிக்கர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
இந்நிலையில், அமெரிக்கர்கள் சுற்றுலாவுக்காக வடகொரியா செல்ல, செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் சட்டப்பூர்வ தடை அமலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும், பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும், வெள்ளை மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.