வடகொரிய அதிகாரிகளை முட்டி மோதி கொண்டு ஓடிய அமெரிக்க பெண் அதிகாரி.. வெளியான பரபரப்பு வீடியோ
பியோங்கியாங்: அமெரிக்காவின் புதிய பத்திரிக்கை செயலாளரான ஸ்டீபனி கிரிஷாம், வடகொரியாவில் இருநாட்டு அதிபர்களின் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவிற்கிடையே முட்டி மோதி தன் நாட்டு பத்திரிகையாளர்களை செய்தி சேகரிக்க சொன்ன சம்பவம் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னை அந்நாட்டு எல்லையில் சந்தித்துப் பேசினார். இதன் மூலம் வடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் பெற்றுள்ளார்
ட்ரம்ப் - கிம்ஜாங் உன் சந்திப்பின் போது அது குறித்து செய்திகளை சேகரித்து கொண்டிருந்த யு.எஸ் பிரஸ் பூல் உறுப்பினர்களுக்கும், வடகொரிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஊடகங்களை செய்தி சேகரிக்க விடாமல் வடகொரிய பாதுகாப்பு அதிகாரிகள் இடையூறு செய்ததாக தெரிகிறது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த களேபரத்திற்கிடையே உள்நுழைந்த வௌ்ளை மாளிகை பத்திரிகை செயலாளரான ஸ்டீபனி கிரிஷாம் தன்நாட்டு ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
முதன் முதலாக அமெரிக்க அதிபர் ஒருவர் வடகொரியாவிற்கு வந்த நிலையில், அண்மையில் வெள்ளை மாளிகையின் புதிய பத்திரிகை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஸ்டீபனி கிரிஷாமை அவமதிக்கும் வகையில் வடகொரிய அதிகாரிகள் நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் சர்வதேச அளவில் வைரலாக பரவி வருகின்றன
தற்போது வெளிவந்துள்ள வீடியோவில் வடகொரியாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள இன்டர்-கொரியன் சுதந்திர மாளிகையில் இரு அதிபர்கள் சந்திப்பு குறித்து, புகைப்படம் எடுக்கவும் செய்தி சேகரிக்கவும் அமெரிக்க நிருபர்கள் முயன்றனர். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்திய வடகொரிய பாதுகாப்பு அதிகாரிகள், செய்திகளை சேகரிக்க விடாமல் கையை வைத்து தொடர்ந்து தடுத்தப்படியும், தள்ளியபடியும் இருந்தனர்.
அப்போது அமெரிக்க பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி பெற்று தர, அந்நாட்டு பத்திரிகை செயலாளரான ஸ்டீபனி கிரிஷாம் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது ஆனால் அவரது கோரிக்கையை வடகொரிய அதிகாரிகள் ஏற்கவில்லை.
வடகொரிய பாதுகாப்பு அதிகாரிகளின் தள்ளுமுள்ளுவிற்கிடையில் குறுக்கே நுழைந்த ஸ்டீபனி கிரிஷாம், தன் நாட்டு பத்திரிகை உறுப்பினர்களிடம், போ, போ என கூறிக்கொண்டே கேமராவின் முன் நிற்கும் ஒரு வடகொரிய அதிகாரியை தள்ளிக் கொண்டு இடைவெளி உருவாக்கி கொண்டே செல்கிறார்.
இதனை தொடர்ந்து அமெரிக்க கேமரா மேன் ஒருவர் ஸ்டீபனி உருவாக்கி தந்த இடைவெளியில், இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு குறித்த செய்தியை சேகரிக்க ஓடுகிறார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாக சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சச்சரவுகளுக்கு முன் இருநாட்டு அதிபர்கள் சந்திப்பு நடக்கும் கட்டிடத்திற்குள் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் அமெரிக்க உயரதிகாரி தலையிட்டு அனுமதி வாங்கி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க பத்திரிகையாளர்கள், அதிபர்கள் சந்திப்பின் போது வட கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் அதிக கெடுபிடியுடன் நடந்து கொண்டதாக கூறியுள்ளனர். தங்களை செய்திகள் சேகரிக்க விடாமல் தடுப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.