7 நாட்களில் நேபாளத்தை தொடர்ச்சியாக தாக்கப் போகும் நில அதிர்வுகள் – திடுக் தகவல்
காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்த 7 நாட்களில் வலுவான நில அதிர்வுகள் நேபாள நாட்டை தாக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 25 ஆம் தேதி பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
10 ஆயிரத்து்ககும் அதிகமானோர் காயம் அடைந்தனர். 2 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாயின. ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதைந்தன. நில நடுக்கத்தை தொடர்ந்து அங்கு அடிக்கடி நிலம் அதிர்ந்து கொண்டிருக்கிறது.
மிதமான மற்றும் நடுத்தர பூகம்பம் அளவுக்கு இந்த நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை 248 முறை நிலம் அ்திர்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் மீண்டும் ஒரு முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அடுத்த 7 நாட்களில் வலுவான நில அதிர்வுகள் நேபாளத்தை மீண்டும் தாக்கக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இதற்கிடையில் நேபாளத்தில் புதிதாக கட்டிடங்கள் கட்ட 2 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அனுமதி பெற்றவர்கள் இரண்டு மாடிக்கு மேல் கட்டக்கூடாது எனவும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.