இந்திய ராணுவத்துடன் புலிகள் மோதியது இதனால்தான்... வைகோ விளக்கம்
சுதுமலையில் தலைவர் பிரபாகரன் பேசினார். நாம் மகத்தான தியாகங்களால் கட்டி எழுப்பியதை அழிப்பதற்கு, ஒரு வல்லாண்மை இந்திய அரசு நம்மீது ஒரு ஒப்பந்தத்தைத் திணிக்கின்றது. நாம் இந்தியாவை நேசிக்கின்றோம்; இந்திய மக்களை நேசிக்கின்றோம்; அவர்களை எதிர்த்துத் துப்பாக்கி ஏந்த நாம் தயாராக இல்லை. ஆனால் ஒன்றைச் சொல்லுகிறேன். சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விரைவில் விழுங்கி விடும். எங்கள் பாதுகாப்பை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம் என்று சொன்னார்.
இடைக்கால நிர்வாகத்தில் கிழக்கு மாகாணத்தைத் தனியாகப் பிரித்துவிடத் திட்டம் தீட்டினார்கள். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பத்மநாதன் என்பவரைத்தான் தலைவர் பிரபாகரன் நிர்வாக சபைத்தலைவராக்கும்படி அறிவித்தார். ஜெயவர்த்தனா என்ன செய்தான் தெரியுமா? கிழக்கில் இருந்து எந்தப் பிரதிநிதியும் இல்லாமல், ஒரு முஸ்லிம் பிரதிநிதி கூடஇல்லாமல் ஒரு திட்டத்தைக் கொடுத்தான். கிழக்கு மாகாணத்தை ஒதுக்கப் பார்த்தான். தலைவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. இதுதான் பிரச்சினை.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துத் திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். துளி நீரும் பருகவில்லை. செப்டெம்பர் 15. அண்ணா பிறந்த நாள்.
கணைக்கால் இரும்பொறை, நான் கேட்ட உடனேயே எனக்குத் தண்ணீர் தரவில்லை என்பதற்காக, வடக்கிருந்து உயிர் துறந்தான். அதேபோலத் தண்ணீர் அருந்தாமல் திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது தலைவர் போய்ப்பார்த்தார்.
திலீபன் அழைப்பது சாவையா? இந்தச் சின்ன வயதில் இது தேவையா? என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் சொல்ல, நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு எதிரே மாரடித்துக் கொண்டு தமிழர்கள் அழுதார்கள். திலீபன் என்ற தியாக தீபம் கொஞ்சம்கொஞ்சமாக அணைந்துகொண்டே வந்தது. அப்போது பலாலிக்கு வந்த படுபாவி தீட்சித், திலீபனைப் போய்ப் பார்க்கக்கூட இல்லை. இந்தக் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுகிறோம் என்று ஒரு வாக்குறுதி கொடுத்து இருந்தால் திலீபன் உயிர் துறந்து இருக்க மாட்டான்.
அதற்கு அடுத்த கொடுமையும் நடந்தது. குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேர் இந்திய அரசு கொடுத்த உறுதிமொழியின்பேரில் எல்டிடிஈ அலுவலகத்தில் இருந்த பொருட்களை எடுக்கக் கடற்புறா என்ற படகில் வருகின்றார்கள். அப்போது சிங்களக் கடற்படை அவர்களைச் சூழ்ந்துகொண்டது. அவர்கள் கையில் ஆயுதம் எதுவும் இல்லை. 17 பேரையும் கைது செய்தார்கள். அவர்கள் தலைவர் பிரபாகரனுக்குத் தகவல் கொடுத்தார்கள். அவர் இந்தியத் தளபதி ஹர்கிரத் சிங்கைத் தொடர்பு கொண்டு சொன்னார். அவர் சிங்கள இராணுவத்தை எச்சரித்தார். அந்தப் 17 பேர் மீது துரும்பு பட்டாலும் உங்களைச் சுட்டுப் பொசுக்கி விடுவோம் என்றார். பலாலி விமான நிலையத்தில் இந்திய இராணுவம் ஒரு வளையம் போட்டது.
அப்போது தீட்சித், ராஜிவ் காந்திக்கு ஒரு யோசனை சொன்னான். இந்த 17 தளபதிகளையும் ஜெயவர்த்தனேவிடம் ஒப்படைத்துவிட்டால், அதன்பிறகு, பிரபாகரன் நம் வழிக்கு வந்து விடுவார். நிர்வாக சபைக்குக் கையெழுத்துப் போடுவார் என்று சொன்னார். அதன்படி, இந்திய இராணுவத்தின் பாதுகாப்பை விலக்கிக்கொண்டார்கள். அந்தத் தளபதிகளைக் கொழும்புக்குக் கொண்டு போக முயற்சித்தார்கள். அவர்கள் விசக்குப்பிகளைக் கடித்தார்கள். 17 பேர்களுக்கும் குப்பிஇல்லை. 15 குப்பிகள்தான் இருந்தன. மூன்று குப்பிகளை ஐந்து பேர் பகிர்ந்து கொண்டார்கள். இரண்டு நிமிடங்களில் 12 பேர் துடிதுடித்து மாண்டார்கள். உயிர் தப்பிய ஐவருள் மூன்று பேரைப் பின்னர் நான் சந்தித்து இருக்கின்றேன்.
மடிந்த மாவீரர்களின் உடல்கள் தீர்வில் திடலில் வைக்கப்பட்டு இருந்தது.
ஓ மரணித்த வீரனே
உன் சீருடைகளை எனக்குத் தா
உன் காலணிகளை எனக்குத் தா
உன் ஆயுதங்களை எனக்குத் தா
என்ற பாடல் ஒலித்தது.
தலைவர் பிரபாகரன் அங்கே வந்தார். புலிகள் கண்ணீர் விடுவது இல்லை. பிரபாகரன் கண்ணீர் வடிக்கவில்லை. அவர்கள் உடலுக்கு மாலை வைத்தார். பிஸ்டலை எடுத்து மீண்டும் இடுப்பில் சொருகிக் கொண்டார். இனி போரிட்டு மடிவது என்று முடிவு எடுத்தார்.