பிரபாகரனை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுது சமாதானம் சொன்ன எம்.ஜிஆர்.- வைகோ
எனக்குத் தெரிய பிரபகரனுக்கு நிகரான ஒரு தலைவன், உலக வரலாற்றில், போர்க்களங்களில் வேறு எவனும் கிடையாது. சே குவேராவை விட, ~பிடல் கேஸ்ட்ரோவை விட, ஹோ சி மின்னை விட, மாவோவை விட, வேறு எவரையும் விட என் தலைவன் பிரபாகரன் உயர்ந்தவன் என்று சொல்லுவதற்குக் காரணம், அவர் தமிழன் என்பதால் மட்டும்அல்ல; ஒழுக்கத்தில் சிறந்தவன்; தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவன். எந்தவிதமான பலவீனங்களும் இல்லாதவன். மற்ற போராளித் தலைவர்களுக்கெல்லாம் பிற நாட்டு ஆயுத உதவிகள் வந்தன. அப்படி எந்த நாட்டு ஆயுத உதவிகளும் கிடையாது. மாறாகப் பல நாடுகளின் தாக்குதல்கள்தான் இருந்தன.
வஞ்சகமாக அவரைத் தில்லிக்கு அழைத்து வந்தார்கள். அப்போது அவரைச் சந்திக்கப் போனேன். தடுத்தார்கள். திரும்பி வந்த தலைவர் பிரபாகரன் அவர்களை இந்திய அரசு சிறை வைத்து இருக்கின்றது என்று நான்தான் உலகத்திற்குச் சொன்னேன். அன்றைக்கு அவரோடு தொலைபேசியில் 33 நிமிடங்கள் பேசினேன். அண்ணே, நான் உங்களைச் சந்தித்துவிட்டுத்தான் போவேன் என்றார்.
ஜெயவர்த்தனாவோடு ராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட்டார். ஏன் தெரியுமா? நெல்லியடி சிங்கள இராணுவ முகாமை, மில்லர் தலைமையில் புலிகள் தகர்த்தபோது, சிங்கள இராணுவச் சிப்பாய்கள் 900 பேர் மடிந்தார்கள். தென் ஆப்பிரிக்காவில் அவர்கள் வாங்கிய ஆயுதங்கள் பயனற்றுப் போயின. அதனால் ஜெயவர்த்தனா நடுங்கினார். இனி கொழும்பு வரை வந்து அடிப்பார்கள் என்று அஞ்சினார்.
அப்போது போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் சிக்கி இருந்த ராஜீவ் காந்திக்கு ஒரு வலை வீசினான். நாம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்றான். ஒரு விவரமும் தெரியாத ராஜீவ் காந்தி, ஒப்பந்தம் போடுவதற்காகத் தலைவர் பிரபாகரனை ஏமாற்றித் தில்லிக்கு அழைத்துக் கொண்டு வந்து அசோகா ஓட்டலில் அடைத்து வைத்தார்கள். உங்கiளைத்தான் சுதந்திரத் தமிழ்ஈழத்தின் பிரதிநிதியாக ஆக்கப்போகிறோம் என்று சொன்னார்கள்.
பாலசிங்கமும், யோகியும் தலைவருடன் இருக்கின்றார்கள். அப்போது அங்கே வருகிறான் தீட்சித். இந்த ஒப்பந்தத்தை வாசித்துப் பாருங்கள் என்று சொல்லிக் கையில் கொடுக்கின்றான் தீட்சித். இதில் நீங்கள் கையெழுத்து இட வேண்டும் என்கிறான்.
ஒப்பந்தமா? எங்களைச் சுதந்திரத் தமிழ் ஈழத்தின் பிரதிநிதியாக அறிவிப்பதாகச் சொல்லித்தானே உங்களது முதன்மைச் செயலர் பூரி சொல்லி அழைத்து வந்தார்கள். இப்போது ஒப்பந்தம் என்று சொல்லி ஏமாற்றுகின்றீர்களே? என்றார்.
என்ன ஒப்பந்தம்? விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிடவேண்டும். இலங்கை அரசோடு பேசி, இடைக்கால நிர்வாகம் அமைத்துக் கொள்ளவேண்டும் என்றது ஒப்பந்தம்.
அதைப் படித்துவிட்டுத் தலைவர் பிரபாகரனின் கண்கள் சிவந்தன. நாங்கள் இதை எதிர்க்கிறோம் என்றார்.
அப்போது தீட்சித் பிடித்துக்கொண்டு இருந்த ஹூக்காவைக் காட்டிச் சொன்னான்: இந்தப் புகை அணைவதற்குள் உங்களை அழித்து விடுவோம் என்றான். அவன் சொன்னதை அப்படியே என்னிடம் பாலசிங்கம் சொன்னார். அதைக்கேட்டுப் பிரபாகரனின் கண்கள் நெருப்புப் பழமாகின. அப்போது, பாலசிங்கம் அவரது கையை இறுகப்பிடித்துக் கொண்டு தடுத்தார்.
தொலைபேசியில் அவரோடு நான்பேசியபோது சொன்னார். நான் கழுத்தில் நச்சுக்குப்பி கட்டிக்கொண்டு இருக்கின்றேன். எங்கள் பிணங்களின் மீதுதான் இந்திய இராணுவம் தமிழ் ஈழத்திற்குள் நுழைய முடியும் என்றார்.
இந்த ஒப்பந்தம் குறித்து எம்.ஜி.ஆருக்கு எதுவும் தெரியாது. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதக் களம் அமைத்துக் கொடுத்தவர் புரட்சித்தiலைவர் எம்.ஜி.ஆர்தான். அதை நான் எங்கேயும் சொல்லுவேன்.
கடைசியாக ராஜீவ் காந்தி சொன்னார். பெயருக்குச் சில ஆயுதங்களை ஒப்படையுங்கள். உங்கள் தாயகத்தின் மறு கட்டமைப்புக்கு மாதம் 50 இலட்சம் ரூபாய் தருகிறோம் என்று.
அந்த நேரத்தில் இந்திய இராணுவத்தை எதிர்ப்பது விவேகம் அல்ல என்று கருதி, வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொண்டார். இலங்கைக்குச் சென்றார் ராஜீவ்காந்தி. அணிவகுப்பைப் பார்வையிட்டபோது, சிங்கள வீரன் ஒருவன் துப்பாக்கியால் அவரது பிடரியில் அடித்துக்கொல்ல முயன்றான். தப்பித்துக் கொண்டார் ராஜீவ் காந்தி.
பிரபாகரன் நாடு திரும்புவதற்கு முன்பு எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதார். இந்த ஒப்பந்தத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொன்னார்.