தமிழனின் அடையாளம் மாபெரும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்: வைகோ
பினாங்கு: உலகத் தமிழர்களின் அடையாளம் மாபெரும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். பினாங்கு அனைத்துலக தமிழ் மாநாட்டில் பேசிய வைகோ இதனை தெரிவித்தார்.
பினாங்கு சர்வதேச தமிழ் மாநாட்டில் தொடக்க விழா 7.11.2014 அன்று மாலை 4 மணி அளவில் தண்ணீர்மலை பால தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வெகு சிறப்பாகத் தொடங்கியது.
விழாவுக்கு வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு ஆலய நிர்வாகக் குழுவின் சார்பில், நாதஸ்வர, மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வைகோ உரை
பின்னர் நடைபெற்ற தொடக்க விழாவில், 55 நிமிடங்கள் வைகோ சிறப்புரையாற்றினார். அவரது உரையை அனைவரும் வரவேற்றுப் பாராட்டினர்.
கதாநாயகன் வைகோ
பினாங்கு துணை முதல்வர் இராமசாமி அவர்கள் பேசும்போது, "நான் அறிந்த வரையில் அன்று முதல் இன்று வரையிலும் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியிலும் ஈழத்தமிழர்களை ஆதரித்து இடைவெளியின்றி தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருபவர் வைகோ ஒருவர்தான். எனவே, வைகோதான் இந்த மாநாட்டின் கதாநாயகன்," என்று பாராட்டினார்.
பாராட்டிய தமிழர்கள்
இன்று (08.11.2014) காலை 9.30 மணி அளவில் மாநாட்டு நிகழ்வுகள் ஜார்ஜ்டவுன் பே வியூ அரங்கில் தொடங்கின. பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் அவர்கள் பங்கேற்றார். வைகோவை அறிமுகப்படுத்தி பேசும்போது, பேராசிரியர் இராமசாமி மீண்டும் தமது கருத்தை வலியுறுத்தினார்.
பொது வாக்கெடுப்பு
சிறப்புரையாற்றிய வைகோ, உலகத் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்தினார். உலக நாடுகளில் தமிழர்கள் பரவிய சரித்திரத்தையும், கூலித் தொழிலாளிகளாக அவர்கள் அடைந்த துன்ப துயரங்களையும், ஈழ பிரச்சினையையும் எடுத்துரைத்தார். தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு; அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி தொடர்ந்து நாம் போராடுவோம் என்று கூறினார்.
மலேசியா பயணம்
இந்த சர்வதேச தமிழ் மாநாட்டில் உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர் டைப்பிங், ஈப்போ, பட்டர்ஒவர்த் ஆகிய இடங்களில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டங்களில் வைகோ சிறப்புரை ஆற்றுகிறார். 12-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
தடையில்லா சான்று
வைகோ மீதான பொடா வழக்கு வாபஸ் பெறப்பட்டாலும், அவர் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொடா நீதிமன்றத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும். மேலும் வைகோ மீது தேசவிரோத வழக்கு சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கிடைத்த விசா
அதனால் அந்த நீதிமன்றத்தில் வைகோ தடையில்லா சான்று பெற வேண்டும் என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்து இருந்தது. இதனால் அவர் இரண்டு நீதிமன்றத்திலும் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று பெற்றதன் மூலம் அவருக்கு மலேசியா செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர் மலேசிய பயணத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.