கார்கில் போர்: வாஜ்பாயை நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டோம்: ஒப்புக் கொண்ட நவாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்: கார்கில் விஷயத்தில் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயை நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முசாபராபாத்தில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கார்கில் போர் குறித்து கூறினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது,
கார்கிலில் போர் தொடுத்ததன் மூலம் என்னை நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டீர்கள் என்று வாஜ்பாயி தெரிவித்தார். அவர் கூறியது சரியே. அவர் இடத்தில் நான் இருந்திருந்தாலும் அதை தான் கூறியிருப்பேன். நிச்சயமாக அவரை முதுகில் குத்திவிட்டோம்.
இடையே இருக்கும் எல்லையை தவிர்த்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்கள் ஒரே மாதிரியாகத் தான் உள்ளனர். அவர்களுக்கும், நமக்கும் ஆலூ கோஷ்ட்(உருளைக்கிழங்கு கூட்டு) பிடித்துள்ளது என்றார்.
1999ம் ஆண்டு கார்கிலில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டபோது இரு நாடுகளும் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. ஷெரீபின் அழைப்பை ஏற்று 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாஜ்பாயி லாகூருக்கு சென்றார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதிக்கான லாகூர் ஒப்பந்தம் கையழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.