லண்டனில் மசூதிக்கு அருகில் பாதசாரிகள் மீது வேன் மோதி பலர் காயம்
லண்டனின் வடக்கு பகுதியில் இருக்கும் மசூதி ஒன்றிற்கு அருகில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.
இது ஒரு "பெரிய சம்பவம்" என போலிசார் தெரிவிக்கின்றனர். செவன் சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள ஃபின்ஸ்பரி பார்க் மசூதிக்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டன் நேரப்படி இரவு 12.20 மணிக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டனர் என பெருநகர போலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் இஸ்லாமிய கவுன்சில், அந்த வேன் "வேண்டுமென்றே" வழிபாட்டாளர்கள் மீது மோதியதாக தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பலர் ரமலான் நோன்பை முடித்துவிட்டு தொழுகைக்காக வந்தவர்கள் என நம்பப்படுகிறது.
லண்டன் அவசர ஊர்தி சேவை, மருத்துவ ஊர்திகள், கருவிகள் மற்றும் பணியாளர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் காயமடைந்தவர்களுக்கு பலர் உதவிகள் செய்வது போலவும் பரப்பரப்பான காட்சிகள் காணப்படுகின்றன.
தெருவில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மற்றொருவர் செயற்கை சுவாசம் கொடுப்பது போலவும், தலையில் காயமடைந்த ஒருவருக்கு தற்காலிக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகளும் அதில் காணப்படுகின்றன.