நாம் தனித்து இல்லை, ஏலியன்களும் இருக்கலாம்..: சொல்கிறார் வாடிகன் விண்வெளியியலாளர்
வாடிகன் சிட்டி: இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனித்து இல்லை. நம்மைச் சுற்றி வேற்றுகிரகவாசிகளும் இருக்கலாம். புதிய பூமிகள் கூட இருக்கலாம். ஆனால் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே. அவருக்கு நிகர் யாரும் இல்லை. அவர் ஒரு தனித்துவம் கொண்டவர் என்று வாடிகன் சிட்டியின் முதன்மை விண்வெளியியலாளர் பாதிரியார் ஜோஸ் பியூன்ஸ் கூறியுள்ளார்.
பூமிக்கு வெளியே யாரேனும் உள்ளனரா என்பதை அறிய நீண்ட நெடுங்காலமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நாசா அனுப்பிய கெப்ளர் விண்கல தொலைநோக்கியானது, பூமிக்கு வெளியே புதிய பூமிகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.
அதிலும் கெப்ளர் 452 பி என்று பெயரிடப்பட்டுள்ள பூமி கிட்டத்தட்ட நமது பூமியைப் போலவே இருக்கலாம் என்று நாசா கூறியுள்ளது. இந்த புதிய பூமி குறித்த ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆர்வமும் மக்களிடையே பொங்கிப் பெருகி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நாசாவின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து வாடிகன் சிட்டியின் முதன்மை விண்வெளியியலாளர் ஜோஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
கலிலியோ...
சூரியனை மையமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட கிரகங்கள் செயல்படுவதாக 350 ஆண்டுகளுக்கு முன்பு கலிலியோ கலிலி கூறினார். அப்போது அவருக்கு கடும் கண்டனங்கள் கிளம்பின. குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலிலியோவை கடுமையாக விமர்சித்தனர்.
நம்பிக்கை...
ஆனால் தற்போது மனிதகுலத்தின் இருப்பிடம் தொடர்பான தனது கருத்தை வாடிகன் மாற்றிக் கொண்டது போலவே தெரிகிறது. மேலும் பூமியைத் தவிர வேறு இடத்திலும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கைக்கும் அது வந்துள்ளதாக தெரிகிறது.
புதிய பூமி கண்டுபிடிப்பு...
வாடிகனில் உள்ள கோளரங்கத்தில் உள்ள விண்வெளியிலாளர்கள் பிற கிரகங்களிலும் உயிரினங்கள் இருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு இந்த புதிய பூமி குறித்த கண்டுபிடிப்பு பலம் சேர்த்துள்ளது என்று கூறியுள்ளனர்.
ஆய்வு...
1582ம் ஆண்டு முதல் இந்த கோளரங்கம் இயங்கி வருகிறது. ஆய்விலும் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம்...
இந்த கோளரங்கத்தின் தலைவரான பாதிரியார் ஜோஸ் பியூன்ஸ் கூறுகையில், 'பிற இடங்களிலும் உயிரினங்கள் இருக்கலாம். வேற்றுகிரகவாசிகள் இருக்கலாம். ஆனால் இயேசுநாதர் ஒருவர்தான். அவர் தனித்துவம் மிக்கவர். அவரை விட வேறு யாரும் இருக்க முடியாது' என்றார்.
வாய்ப்பேயில்லை...
மேலும் அவர் கூறுகையில், ‘இயேசு நாதரைப் போல வேரு ஒருவர் இருக்க முடியாது. வேற்றுகிரகத்தில் இன்னொரு இயேசுநாதர் இருக்க முடியாது. இருக்கவும் வாய்ப்பில்லை.
நெருங்க முடியாது...
வேற்றுகிரவகவாசிகள் இருந்தாலும் கூட மனிதர்களால் அவர்களை நெருங்க முடியாது, சந்திக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்.
சந்திக்க வாய்ப்பில்லை...
புதிய கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம். புத்திசாலித்தனமான உயிரினங்கள் இருக்கலாம். ஆனால் நாம் அவர்களையோ அவர்கள் நம்மையோ சந்திக்க வாய்பிப்ல்லை' என்றார் அவர்.
அரிஸ்டாட்டில் கருத்து...
கலிலியோ, வானியலில் புதிய வரலாறு படைத்தவர் ஆவார். பூமியைச் சுற்றி அத்தனை கிரகங்களும் சுற்றுவதாக அரிஸ்டாட்டில் கூறி வந்ததையே அப்போதைய உலகம் நம்பி வந்தது. ஆனால் சூரியனைத்தான் அனைத்து கிரகங்களும் சுற்றுகின்றன என்று கலிலியோ கண்டுபிடித்துக் கூறினார்.
வீட்டுக்காவல்..
அதை அப்போதைய மக்கள் ஏற்கவில்லை. அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டனர். பின்னர் வீட்டுக் காவலிலேயே இறந்தார் கலிலியோ. இந்த சம்பவம் நடந்தது 1633ம் ஆண்டு.
பகிரங்க மன்னிப்பு...
அந்த சம்பவத்திற்காக 1992ம் ஆண்டு அப்போதைய போப்பாண்டவர் 2ம் ஜான் பால் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார் என்பது நினஐவிருக்கலாம்.