இலங்கை வருகிறார் போப் ஆண்டவர்: தமிழர் பகுதிகளை பார்வையிட திட்டம்?
வாடிகன்சிட்டி: ஜனவரி மாதத்தில் இலங்கையில் போப் ஆண்டவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத பிரிவின் தலைவரான போப் பிரான்சிஸ் ஜனவரி 12ம்தேதி முதல் 15ம்தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக வாடிகன் சிட்டி அறிவித்துள்ளது. இருப்பினும், பயணத்திற்கான நோக்கம் பற்றி அதில் தெரிவிக்கப்படவில்லை. இலங்கையில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட பிறகு, ஃபிலிப்பைன்சுக்கு, போப் ஆண்டவர் செல்ல உள்ளார்.
இம்மாத துவக்கத்தில் போப் ஆண்டவருக்கு கடிதம் எழுதிய தமிழ் சிவில் சொசைட்டி ஃபோரம் (TCSF) அமைப்பு, இலங்கையின் வட கிழக்கு பகுதிக்கு வருகை தருமாறு அவரை கேட்டுக்கொண்டது. இலங்கையின் வட கிழக்கு பகுதியில் தமிழர்கள் பகுதியில், இலங்கை மக்கள் குடியமர்த்தப்படுவதாகவும், இதை நேரில் பார்த்து தெரிந்துகொள்ளும்படியும் போப் ஆண்டவருக்கு தமிழர் நலன்சார் குழுக்கள் கோரிக்கைவிடுத்தன.
எனவே போப் ஆண்டவர் இலங்கை வரும்போது தமிழர் பகுதிகளுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.