ஓமைகாட்! சைவப் பிரியர்களுக்கு இதயநோய், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாம்
நியூயார்க்: பல தலைமுறைகளாக சைவப்பிரியர்களாக இருப்பவர்களின் குடும்பத்தாருக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சைவப்பிரியர்கள் மற்றும் அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் உள்ள அசைவப்பிரியர்களை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினர்.
ஆய்வு முடிவு அவர்களுக்கு மட்டும் அல்ல உலக மக்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. காரணம் பல தலைமுறைகளாக சைவப்பிரியர்களாக இருப்பவர்களின் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு அதனால் அவர்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சைவப்பிரியர்களின் மரபணுவில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும் அராச்சிடோனிக் ஆசிட் உற்பத்தி அதிகரிக்கிறதாம். ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சியை சாப்பிடுவோருக்கு தான் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவர்கள் இதுவரை நம்பியுள்ளனர். இந்நிலையில் சைவப்பிரியர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளதால் மருத்துவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இது குறித்து கார்னெல் பல்கலைக்கழக பேராசிரியர் டாம் பிரென்னா கூறுகையில்,
தலைமுறை தலைமுறையாக சைவப்பிரியர்களாக இருப்பவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு அது வெஜிடபிள் ஆயிலை அராச்சிடோனிக் ஆசிடாக மாற்றுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு புற்றுநோய், இதயநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்றார்.