என்னை கொலை செய்ய கொலம்பியா நாட்டு கூலிப்படைக்கு டிரம்ப் உத்தரவு.. வெனிசுலா அதிபர் பகீர் தகவல்
கராக்கல்: என்னை கொலை செய்ய கொல்ம்பியா அரசு மற்றும் கூலிப்படையினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார் என வெனிசுலா அதிபர் பகீர் தகவலை கிளப்பியுள்ளார்.
வெனிசுலாவில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு அமெரிக்காதான் காரணம் என அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றம்சாட்டி வந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவுடனான அனைத்து நட்புறவுகளையும் முறித்து கொள்வதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இதனால் கோபமடைந்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் எண்ணெய் நிறுவனங்களின் மீதான பொருளாதார தடையை விதித்தார். இந்த நிலையில் வெனிசுலா அதிபரை கொலை செய்ய டிரம்ப் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மதுரோ பேட்டி
இதுகுறித்து அதிபர் நிகோலஸ் மதுரோ ரஷ்யா செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வெனிசுலாவுக்கு முன்னதாகவே தேர்தல் நடைபெறாது. நான் 68 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளேன். நான் சட்டப்படியும் வெற்றி பெற்றுள்ளேன்.
கூலிப்படை
புதிதாக மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என ஏகாதிபத்தியவாதிகள் விரும்பினால் 2025-ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். என்னை கொலை செய்யும்படி கொலம்பியா அரசு மற்றும் கொலம்பியாவை சேர்ந்த கூலிப்படை கும்பல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பரபரப்பு
இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு நாள் எனக்கு ஏதாவது நடக்கலாம். எனக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு டிரம்ப் மற்றும் கொலம்பியா அதிபர் இவான் டியூக் ஆகியோர்தான் பொறுப்பு என பரபரப்பு குற்றச்சாட்டை மதுரோ வீசியுள்ளார்.
கொலை முயற்சி
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலைநகர் கராக்கசில் நடந்த ராணுவ தின நிகழ்ச்சியின் போது, ஆளில்லா விமானங்கள் மூலம் அதிபர் நிகோலஸ் மதுரோவை கொல்ல முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரோ குற்றச்சாட்டால் மேலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.