வருட இறுதிக்குள் 10 லட்சம் இலவச வீடுகள்; இல்லையெனில் மீசை “நோ” - வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் சூளுரை!
கேரகாஸ்: வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் இலவச வீடுகளைக் கட்டித் தராவிட்டால் மீசையை எடுப்பேன் என வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ தெரிவித்துள்ளார்.
வெனிசூலாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தன.
இதையடுத்து, அந்தக் குடும்பத்தினருக்கு இலவச வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை அப்போதைய அதிபர் ஹியூகோ சாவெஸ் 2011 ஆம் ஆண்டு அறிவித்தார்.
2019 ஆம் ஆண்டுக்குள் 30 லட்சம் இலவச வீடுகளைக் கட்டித் தருவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக ஹியூகோ சாவெஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதையடுத்து, வெனிசூலாவின் அதிபராக நிக்கோலஸ் மடூரோ பதவியேற்றார்.
அவரது ஆட்சியில் இதுவரை 8 லட்சம் இலவச வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நிக்கோலஸ் மடூரோ பேசுகையில், "வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் 10 லட்சம் வீடுகளைக் கட்டத் தவறினால் எனக்கு நானே விதித்துக் கொள்ளும் தண்டனையாக எனது மீசையை மழித்துக் கொள்வேன்'' என்று சூளுரைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வெனிசூலாவில் வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.