மருந்து, மளிகை சாமான்கள், பால் பவுடர் வாங்க கொலம்பியாவுக்கு "படையெடுத்த" வெனிசூலா மக்கள்!
கொலம்பியா: வெனிசூலா நாட்டவர் ஆயிரக்கணக்கில் கொலம்பியா நாட்டுக்குள் உணவுப் பொருட்களை வாங்கக் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் வெனிசூலா நாட்டவர் உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு தங்களது நாட்டுக்குத் திரும்பினர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைப்பதில்லை. அந்த அளவுக்கு அங்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதையடுத்து கொலம்பியா நாட்டுடன் பேசிய வெனிசூலா அரசு தமது நாட்டு மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொலம்பியாவுக்கு வந்து வாங்கிச் செல்ல எல்லையைத் திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தது. இதை கொலம்பியா அரசும் ஏற்றது.
எல்லை திறப்பு
இதையடுத்து நேற்று குறிப்பிட்ட நேரத்திற்கு எல்லை திறக்கப்படும் என கொலம்பியா அறிவித்தது. இதையடுத்து வெனிசூலா நாட்டவர் எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்து விட்டனர். திட்டமிட்டபடி எல்லை திறக்கப்பட்டதும், அத்தனை பேரும் திமுதிமுவென கொலம்பியாவுக்குள் நுழைந்தனர்.
அத்தியாவசியப் பொருட்கள்
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கடைகளில் தேவையான உணவுப் பொருட்கள், மருந்து, பால் பவுடர் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொண்டு தமது நாட்டுக்குத் திரும்பினர்.
ஒரு வருடத்திற்குப் பிறகு
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு கொலம்பியா எல்லை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.
பெரும் பொருளாதார வீழ்ச்சி
வெனிசூலா நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இத்தனைக்கும் இது எண்ணெய் வளம் மிக்க நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை சரிவால் வந்த வினை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அடியோடு குறைந்து போய் விட்டதால் வெனிசூலா கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது, பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து விட்டது.
கோபத்தில் மக்கள்
வெனிசூலா அரசின் தவறான பொருளாதார கொள்கைதான் இந்த நிலைக்குக் காரணம் என்று மக்கள் கடும் கோபத்துடனர். சாதாரண மருந்து, மாத்திரை கூட அங்கு கிடைப்பதில்லை என்பது மிகக் கொடுமையானது.