கடும் சூறாவளி... 3 அடி உயர ராட்சத அலைகள்... வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ்!
வெனிஸ்: இத்தாலியில் வெனிஸ் நகரில் கடும் காற்று, கன மழை காரணமாகவும், கடல் நீர் புகுந்ததாலும் அந்த நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. மழை நீரும், 3 அடி உயரத்துக்கு எழுந்த கடல் அலைகளும் வெனிஸை வெள்ளத்தில் மிதக்க வைத்து இருக்கிறது.
கடந்த ஆண்டு இதேபோல் வெள்ளம் ஏற்பட்டதால் அந்த நாடு அரசு வெனிஸ் நகரத்தில் அதி நவீன வெள்ளத்தடுப்பு சாதனங்கள் பொருத்தியது. ஆனால் இந்த திட்டம் தோல்வியடைந்து மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் ஒன்றான இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரம் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டது. சிறு, சிறு தீவுகள் உள்ள சுற்றுலா விரும்பிகளுக்கு பிடித்தமான இந்த நகரத்தில் மோசமான வானிலை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து குடியிருப்புகளுக்கு தண்ணீர் புகுவது வழக்கமாகி விட்டது.
கடந்த ஆண்டு அலையின் கடும் தீவிரத்தால் வெனிஸ் நகரம் முழுவதும் தண்ணீர் புகுந்து ஆறடி வெள்ளத்தில் மிதந்தது. அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. வெனிஸில் கடல் நீர் புகுவதை தடுப்பதற்காக அக்டோபர் மாதம் நகரின் பல இடங்களில் அதி நவீன வெள்ளத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டன. இதனால் வெள்ளம் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்ததால் வெனிஸ் நகரம் மீண்டும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் கடலில் அலைகள் 3 அடி உயரத்திற்கு எழுந்து கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. நகரின் புனித மார்க் சதுக்கம் உள்ளிட்ட பல இடங்கள் தண்ணீரில் மிதந்து வருகின்றன. அங்குள்ள மக்கள் தண்ணீர் புகாத உடையுடன் வலம் வருகின்றனர்.
அதி நவீன வெள்ளத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு இருந்த போதிலும் வெனிஸ் நகரம் மீண்டும் தண்ணீரில் மிதந்து வருவது அந்த நாட்டு நகர அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுளளது. குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்னர் முன்னறிவிப்பு செய்தால் மட்டுமே வெள்ளத்தடுப்பு சாதனத்தை பயன்படுத்த முடியும் என போலீசார் தெரிவித்தனர்.