நேதாஜி விமான விபத்தில் தான் உயிரிழந்தார்... இங்கிலாந்து இணையதளம் தகவல்
லண்டன்: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் உயிரிழந்தார் என்று தற்போது இங்கிலாந்து இணையதளம் ஒன்று உறுதி செய்துள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவரான சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர். இவர் 1945ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டார் என்றும் இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து 1964-ம் ஆண்டு இறந்து விட்டார் என்றும் பல தகவல்கள் கூறுகின்றன. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது இன்னும் பெரிய சர்ச்சையாகவே இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ளது.
நேதாஜியின் மரணம் தொடர்பாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், அவரது இறப்பு மட்டும் இன்னும் மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையைில், நேதாஜி 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில்தான் இறந்தார் என இங்கிலாந்து இணையதளம் ஒன்று தற்போது செய்தி வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்தாரா? என விசாரிக்க குழு ஒன்றை அமைத்து இருப்பதாக அப்போதைய வைஸ்ராய் லார்டு ஆர்ச்சிபால்டு வேவல், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந்தேதி தனது அமைச்சர்களிடம் தெரிவித்தார். இந்த அமைச்சரவை கூட்டம் தொடர்பாக பின்னாளில் கண்டெடுக்கப்பட்ட கையெழுத்து பிரதியில், நேதாஜியின் மரணம் உண்மைதான் என கூறப்பட்டு இருந்தது என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் வெளியுறவு செயலாளர் மால்கம் ரிப்கின்ட் கடந்த 1995-ம் ஆண்டு லார்டு ஆர்ச்சருக்கு எழுதிய கடிதத்தின் பிரதியையும் அந்த இணையதளம் வெளியிட்டு இருந்தது.
அண்மையில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களை ஜப்பான் அரசு வெளியிட்டது. அதிலும் 1945ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 18ம் தேதி தைவான் நாட்டில் தைபே விமான தளம் அருகே நடந்த விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.