ஜெர்மனி விமானம் மலை மீது மோதும் முன் 'கடவுளே' என கதறிய பயணிகள்.. வீடியோ சிக்கியது
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலை மீது மோதும் முன்பு விமானத்திற்குள் நடந்ததை பயணிகளில் யாரோ தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது கிடைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் இருந்து ஜெர்மனி சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி விபத்துக்குள்ளாக்கினார். இதில் விமானத்தில் இருந்த லுபிட்ஸ் உள்பட 150 பேர் பலியாகினர்.
விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் இருந்து செல்போன் ஒன்று கிடைத்துள்ளது.
வீடியோ
அந்த செல்போனில் விமானம் விபத்துக்குள்ளாகும் சில நொடிகளுக்கு முன்பு பயணிகளின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை தெரிவிக்கும் வீடியோ உள்ளது. அந்த வீடியோவை பயணிகளில் யாராவது எடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
அலறல்
சில நொடிகளே ஓடும் அந்த வீடியோவில் பயணிகள் பயத்தில் கடவுளே, கடவுளே என்று கதறுவதை பார்க்க முடிகிறது.
உண்மை
தற்போது கிடைத்துள்ள வீடியோ உண்மையானது தான் என்று பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமானத்தில் இருந்த பயணிகள் பீதியில் பல மொழிகளில் கடவுளை அழைக்கும் காட்சியை பார்க்கவே பரிதாபமாக இருந்தது என்று அவை மேலும் தெரிவித்துள்ளன.
விமானி அறை
பயணிகளின் அலறலுக்கு இடையே இரும்பால் கதவை இடிக்கும் சப்தமும் கேட்கிறது. விமானி அறைக் கதவை கேப்டன் பேட்ரிக் கோடாரியால் இடிக்கும் சப்தம் தான் அது என்று கூறப்படுகிறது. லுபிட்ஸ் கேப்டனை விமானி அறைக்கு வெளியே வைத்து பூட்டிவிட்டு தான் விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.