பெருச்சாளியிடம் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த புறா...!
நியூயார்க்: எலியை எப்போதுமே சாதாரணமாக நினைக்கக் கூடாது என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது. அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரில் ஒரு பெருச்சாளி, புறா ஒன்றை முழுமையாக சாப்பிட்டு ஏப்பம் விட்ட காட்சி பலரையும் அதிர வைத்து விட்டது.
இந்த வீடியோ படம் தற்போது சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வைரல் ஆகியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில், நடு ரோட்டில், அந்தப் புறாவை அடித்து கடித்துக் கொன்று முழுமையாக அதை சாப்பிட்டு முடித்து விட்டு இடத்தைக் காலி செய்துள்ளது அந்த பெருச்சாளி.
இந்தக் காட்சியை அங்கிருந்தோர் செல்போன் வீடியோவில் படமாக்கி இணையதளங்களில் போட்டுள்ளனர்.
அந்தப் புறா எலியிடம் சிக்கிக் கொண்டு தப்பிக்க முடியாமல் திணறிய காட்சி பார்க்கவே பரிதாபமாக உள்ளது. முதலில் புறாவின் இறக்கைகளை கடித்துத் துண்டித்த எலி பின்னர் புறாவை தனது பற்களால் கடித்துக் குதறுகிறது. புறாவின் கழுத்தைக் கடிக்கும்போது புறா துடித்த துடிப்பு பார்க்கவே கோரம்.
இந்த வீடியோ 2.47 நிமிடம் ஓடுகிறது. ஜான் ப்ரூன்ட் என்பவர் இதை படமாக்கி யூடியூபில் போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அந்தப் புறா, எலியிடமிருந்து விடுபட்டு ஓடுவது போலத் தெரிந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் புறா ஓடு ஓடு என்று கூச்சலிடுகின்றனர். ஆனால் காயமடைந்திருந்ததாலும், இறக்கை வெட்டப்பட்ட நிலையில் இருந்ததாலும் அந்தப் புறாவால் பறக்க முடியவில்லை. மேலும் எலியும், ஓடி வந்து புறாவை மடக்கி விடுகிறது.
புறாவை முழுமையாக கொன்றதைத் தொடர்ந்து அதன் உடலைத் தூக்கிக் கொண்டு அருகாமையில் இருந்த புதருக்குள் ஓடி விட்டது எலி.