தென் சீன கடல்...வியட்நாம் மீது சீனா அழுத்தம்...ஒரு பில்லியன் டாலர் நஷ்டம்!!
ஹனோய்: சீனாவின் அழுத்தம் காரணமாக இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை வியட்நாம் முறித்துக் கொண்டது. இதனால், அந்த நாட்டுக்கு 1 பில்லியன் டாலர் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தென் சீனா கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதை தற்போதைக்கு வியட்நாம் நிறுத்திக் கொண்டுள்ளது.
Recommended Video
தென் சீன கடல் பகுதியில் வியட்நாம் அரசுக்கு சொந்தமான வியட்நாம் பெட்ரோ என்ற பெயரில் எண்ணெய் கிணறுகள் உள்ளன. இதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களை ஸ்பெயினில் இருக்கும் ரெப்சோல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருக்கும் முபாதலா நிறுவனங்களுக்கு கொடுக்க ஒப்பந்தம் செய்து இருந்தது. இந்த ஒப்பந்தம் ரத்தாகி இருப்பதை ரெப்சோல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உளவுக் கப்பல்கள் ரோந்து:
தென் சீன கடல் பகுதியில் தற்போது பெரிய அளவில் சீனா, அமெரிக்கா இடையே பனிப் போர் நடந்து வருகிறது. இரண்டு நாடுகளின் போர்க் கப்பல்களும், உளவு கப்பல்களும் அந்தப் பகுதியில் ரோந்து வருகின்றன. இந்தப் பகுதியில் எண்ணெய் எடுத்துக் கொண்டு இருந்த ரஷ்ய நிறுவனத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தென் சீன கடல் பகுதியில் தற்போது எண்ணெய் நிறுவனங்களின் மீது அழுத்தம் அதிகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவின் யு வடிவம்
வியட்நாமுக்கு வெளியே பெரிய அளவில் பொருளாதாரத்தை கொடுத்து வந்தது ரெப்சோல் எண்ணெய் நிறுவனம். இதற்கு தென் சீனக் கடல் பகுதியில் 13 எண்ணெய் கிணறுகள் உள்ளன. தென் சீனக் கடலில் வியட்நாம் உரிமை கோரும் பகுதியில் இருந்து சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த எண்ணெய் கிணறுகள் அமைந்துள்ளன. ஆனால், 1984ல் சீனா ஏற்படுத்திக் கொண்ட வரைபடத்திற்குள் இந்த எண்ணெய் கிணறுகள் வருகின்றன. தென் சீன கடல் பகுதியில் ஒன்பது கோடுகள் கொண்டு யு வடிவத்தை சீனா ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
வியட்நாமுக்கு இது புதிதல்ல
தற்போது இந்த தடையால் எண்ணெய் நிறுவனங்களிடம் வாங்கி இருந்த பணத்திற்கு இழப்பீடும் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. அதற்காகத்தான் 1 பில்லியன் டாலரை வியட்நாம் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது அந்த நாட்டுக்கு பெரிய இழப்பாகவும் அமைந்துள்ளது. இதற்கு முன்பும் சீனா இதேபோன்ற தடைகளை வியட்நாமுக்கு ஏற்படுத்தி உள்ளது.
மேற்கத்திய நாடுகளைப் போலவே ரஷ்யாவிடமும் இந்த விஷயத்தில் சீனா கவனத்துடன் நடந்து கொள்ள விரும்புகிறது. ரஷ்யாவுக்கும் இந்தப் பகுதியில் நோ சொல்லியே வந்துள்ளது.
மிரட்டல் விடும் பாம்பியோ
சமீபத்தில் தென் சீன கடலில் தனது ஆதிக்கத்தை சீனா அதிகரித்து வருகிறது. எண்ணெய் வளங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. இதை அமெரிக்க கடுமையாக எதிர்க்கிறது. இந்த விஷயத்தில் வியட்நாமுக்கு ஆதரவாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தார். தென் சீன கடல் பகுதியில் அடுத்தவர்களின் எண்ணெய் வளத்தை சீனா அபகரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சீனாவின் இந்த செயல் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்து இருந்தார். வியட்நாம் போன்ற நாடுகளுக்கு அவர்களது எண்ணெய் வளங்களை காப்பாற்றிக் கொள்ள அமெரிக்கா துணை நிற்கும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.