நண்பன் டிரம்ப்பை 2வது முறையாக சந்திக்கிறார் கிம் ஜோங் உன்.. வியட்நாமில் இன்று முக்கிய ஆலோசனை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்கிறார்.
ஹனோய்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்கிறார். வியட்நாமில் இந்த இரண்டாவது சந்திப்பு நடக்கிறது.
ஒரு காலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும் எலியும் பூனையுமாக இருந்தனர். இரண்டு நாட்டு தலைவர்களும் அடிக்கடி எதிர் எதிராக கருத்து தெரிவித்துக் கொண்டு இருந்தனர்.
அதேபோல் அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்றும் கூட இரண்டு நாட்டு தலைவர்களும் எச்சரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு மத்தியில் இவர்கள் உறவில் சமூகம் ஏற்பட்டு சென்ற வருடம் சிங்கப்பூரில் இரண்டு தலைவர்களும் சந்தித்தனர்.
நல்ல உறவு
இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் அணு ஆயுதங்களை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது. அணு ஆயுத தளவாடங்களையும், உற்பத்தியையும் கைவிட போவதாக வடகொரியா அறிவித்தது. இதனால் கிம் மற்றும் டிரம்ப் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.
எப்படி வந்தனர்
இந்த நிலையில் தற்போது வியட்நாமில் இரண்டு நாட்டு தலைவர்களும் மீண்டும் சந்திப்பு நடத்த இருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் சந்தித்த இவர்கள் ஒரே வருடத்திற்குள் மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள். இந்த சந்திப்பிற்காக கிம் மூன்று நாட்களுக்கு முன்பே ரயில் மூலம் சீனா வழியாக வியட்நாம் வந்தடைந்தார். அவர் 3000 கிமீ பயணம் செய்து வந்தார். டிரம்பும் இன்று விமானம் மூலம் வியட்நாம் வந்தடைந்தார்.
எவ்வளவு நேரம் பேசுவார்கள்
இவர்கள் இன்று மாலை 6.30 மணிக்கு சந்திக்க இருக்கிறார்கள். சுமார் 2.30 மணி நேரம் இவர்கள் பேசுவார்கள். அதன்பின் இரவு உணவு ஒன்றாக சாப்பிட இருக்கிறார்கள். வியட்நாம் தலைவர்களும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
முக்கிய முடிவு
அணு ஆயுதங்கள் குறித்து இதில் பேச வாய்ப்புள்ளது. வடகொரியா மீது இருக்கும் நீக்கப்படாத சில தடைகளை நீக்குவது குறித்தும் இதில் பேச உள்ளனர். பல முக்கிய ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
மீண்டும் சந்திப்பு
அதேபோல் இவர்கள் இருவரும் நாளை மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள். நாளைய சந்திப்புதான் மிக முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை சந்திப்பு அதிக பாதுகாப்பிற்கு இடையில், நீண்ட நேரம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.