மற்றொரு சர்ச்சை.. கோஹ்லி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 'மோசடி மன்னன்' மல்லையா!
இந்தியா பாகிஸ்தான் அணிகளிடையேயான ஆட்டத்தை பார்த்து ரசித்த சர்ச்சை அடங்குவதற்குள் விராட் கோஹ்லியின் நிகழ்ச்சியில் பங்கேற்று அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜய் மல்லையா.
லண்டன் : இந்தியாவில் வங்கிகளிடம் கடன் வாங்கி மோசடி செய்து லண்டன் தப்பியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா அங்கு விராட் கோஹ்லி நிகழ்ச்சியில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளிடம் வாங்கிய சுமார் 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாத நிலையில், கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பியோடினார். அவருக்கு பலமுறை பிடிவாரன்ட் பிறப்பித்தும் அவர் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
விஜய் மல்லையாவை நாடு கடத்தவதற்கான நடைமுறைகள் லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிற்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா உடனடியாக ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில், ஞாயிறன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை அவர் பார்த்தார். அவருடைய வருகை, சர்வதேசஅளவில் ஊடகங்களில் செய்தியாக வெளியாகின.
இந்தியாவில் மோசடி தப்பிச் சென்ற ஒருவர் லண்டனில் சொகுசாக வாழ்வதற்கு கண்டனங்களும், கலாய்க்கும் மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன. இந்நிலையில் லண்டன் நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோஹ்லி, அவருடைய தொண்டு நிறுவனம் சார்பில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
கோஹ்லியின் விழாவில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த விழாவிற்கு விஜய்மல்லையாவும் காரில் வருகை தந்திருந்தார். சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில், கோஹ்லி ஆடும் ஆர்சிபி கிரிக்கெட் அணியின் உரிமையாளர் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது.