கடைசி நாளில் திருப்பம்.. இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு
லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என்று லண்டனில் உள்ள பிரிட்டன் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொழில் அதிபர் விஜய் மல்லையா அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 64) இந்தியாவில் உள்ள எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு பிரிட்டன் நாட்டில் உள்ள லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இதையடுத்து விஜய் மல்லையா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இரு விசாரணை அமைப்புகளும் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் விஜய் மல்லையா கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஏதோ காரணத்தோடுதான் செய்துள்ளனர்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. சீனாவிற்கு சவால் விடும் டிரம்ப்!
இந்நிலையில் வழக்கின் வாதங்கள் முடிந்த நிலையில் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்தும்படி 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா லண்டனில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் இருந்தது. அந்த அவகாசத்தை பயன்படுத்திய மல்லையா கடைசி நாளான (14வது நாள்) நேற்று மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவுக்கு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகள் வரும் மே 14ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து அரசு வழக்குரைஞர் சேவையின் (சிபிஎஸ்) செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.