கடனை பற்றி கவலையேபடாமல் லண்டனிலிருந்து ஐபிஎல் பைனலை ரசித்த மல்லையா!
லண்டன்: வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையா, லண்டனில் அமர்ந்தபடி தனது மகன் சித்தார்த் மல்லையாவுடன் சேர்ந்து ஜாலியாக ஐபிஎல் கிரிக்கெட் பைனல் போட்டியை பார்த்து ரசித்ததோடு அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடன் பாக்கி மற்றும் கிங்பிஷர் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள பாக்கி என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட விஜய் மல்லையா திடீரென லண்டன் தப்பியோடிவிட்டார்.
அவரை இந்தியாவுக்கு அழைத்துவர ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதேநேரம், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மல்லையாவை நாடு கடத்த முடியாது என்றும், அதற்கு தங்கள் சட்டம் இடம்தரவில்லை என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நடுவேயான ஐபிஎல் இறுதி போட்டியை மல்லையா தனது மகன் சித்தார்த்துடன் அமர்ந்து டிவியில் பார்த்து ரசித்துள்ளார்.
இந்த வீடியோவை சித்தார்த் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் நானும், எனது தந்தையும் ஐபிஎல் பைனல் போட்டியை பார்க்கிறோம்.. என்று சித்தார்த் வர்ணனை செய்ய, மல்லையாவோ, "கோ ஆர்சிபி.." என உற்சாகமூட்டும் வகையில் பேசுகிறார். இருவரும் ஜாலியாக இருப்பதை வீடியோவில் பார்த்த கிங்பிஷர் ஊழியர்கள் கொதித்துப்போயுள்ளனர்.
கிங்பிஷர் முன்னாள் ஊழியர் நீத்துசுக்லா கூறுகையில், மல்லையா விஷயத்தில் பாஜகவை காங்கிரஸ் குற்றம்சாட்டுவதில் பிரயோஜனமில்லை. காங்கிரஸ் அரசில்தான், மல்லையா பணம் சம்பாதிக்க உதவி செய்யப்பட்டது. இப்போது மல்லையாவை எப்படியாவது இந்தியாவுக்கு இழுத்துவர வேண்டியது மத்திய அரசின் கடமை. அப்படி செய்தால்தான் மற்ற அரசுகளுக்கும், மோடி அரசுக்கும் வித்தியாசம் உண்டு என்பது நிரூபணமாகும் என்றார்.
கடன், மோசடிக்காரரை போல இன்றி, மல்லையா தனது வாழ்க்கையை என்ஜாய் செய்து கொண்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.