வெளிநாட்டுக்கு தப்புவதற்கு முன் மத்திய நிதி அமைச்சரை சந்தித்தேன்- விஜய் மல்லையா பகீர்
லண்டன்: வெளிநாட்டுக்கு தப்புவதற்கு முன்னர் மத்திய நிதி அமைச்சரை சந்தித்தேன் என விஜய மல்லையா பகீர் தகவலை அளித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 14-க்கும் மேற்பட்ட பொதுத் துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடனாக பெற்று அதை திருப்பி செலுத்தாதவர் விஜய் மல்லையா. இவர் கடன்களை திருப்பி செலுத்தாமல் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பி சென்றார்.
மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள சிறைச்சாலைகள் மோசமாக உள்ளதாக விஜய் மல்லையா குற்றம்சாட்டினார்.
வீடியோ சமர்ப்பிப்பு
அப்போது விஜய்மல்லையா அடைக்கப்படவுள்ள இந்தியாவில் மும்பை ஆர்தர் சாலை சிறையை வீடியோவாக எடுத்து சமர்ப்பிக்குமாறு லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த வீடியோவை சமர்ப்பிக்க நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நான் வெளிநாட்டை விட்டு வெளியேறினேன்
அப்போது மதிய உணவு இடைவேளையின்போது விஜய் மல்லையாவிடம் வெளிநாட்டுக்கு செல்லுமாறு யாரனும் ஐடியா கொடுத்தனரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் மல்லையா பதில் அளிக்கையில், ஜெனீவாவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வேண்டியிருந்ததால் நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.
சாதகம்
அதற்கு முன் நிதி அமைச்சரவை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக தெரிவித்தேன். சுமார் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள எனது சொத்துகளை பட்டியலிட்டு, கடந்த ஜூன் 22-ம் தேதி, கர்நாடக ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தேன். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்காக கோர்ட்டு மேற்பார்வையில் அந்த சொத்துகளை விற்று, கடனை திருப்பிச் செலுத்த அனுமதிக்குமாறு அம்மனுவில் கூறி இருக்கிறேன். அதை நீதிபதி சாதகமாக பரிசீலிப்பார் என்று நம்புகிறேன்.
கிண்டல்
ஆனால் கடனை திருப்பிச் செலுத்தும் எனது முயற்சிக்கு வங்கிகள் ஒத்துழைக்கவில்லை. நான் ஒரு பலிகாடாவாக்கப்பட்டுள்ளேன். எந்த அரசியல் கட்சியும் என்னை விரும்பவில்லை. என்னை அடைப்பதாக சொல்லப்படும் மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலை வீடியோ "ரொம்ப பிரமாதமாக" இருப்பதாக அவர் கிண்டலாக கூறினார்.
அருண் ஜேட்லி மறுப்பு
மத்திய நிதி அமைச்சரை தான் சந்தித்ததாக விஜய் மல்லையா கூறிய நிலையில் யார் என்று அவர் கூறவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தப்பி சென்றதால் அவர் அருண் ஜேட்லியைதான் சந்தித்திருக்க முடியும் என தெரிகிறது. எனினும் விஜய்மல்லையாவை தான் முறைப்படி சந்திக்கவில்லை என அருண்ஜேட்லி தானாக முன்வந்து விளக்கம் அளித்துள்ளார்.