விஜய் மல்லையா வழக்கில் நாளை க்ளைமேக்ஸ்.. எல்லாம் சரியா நடந்தா, 28 நாளில் இந்தியாவில் இருப்பார்
லண்டன்: தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிராக அவர் செய்த, மேல்முறையீடு மனு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் உயர்நீதிமன்றத்தின், மேல்முறையீட்டு நீதிமன்ற பிரிவில், நாளை செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது.
இந்தியாவில், பல்வேறு வங்கிகளிடமிருந்து, ரூ .9,000 கோடிக்கு மேல் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் மல்லையா. இதையடுத்து அவர் இங்கிலாந்துக்கு தப்பியோடினார்.
ஆனால், இந்திய விசாரணை அமைப்புகள் இங்கிலாந்து அரசு உதவியோடு, அவரை இந்தியா கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மல்லையா கருத்து
இதனிடையே, சமூக ஊடகங்கள் மூலம் மல்லையா தனது கருத்துக்களை முன்வைத்து வருகிறார், பலமுறை தான் கடன்களை திருப்பிச் செலுத்த முன்வந்தும், வங்கிகள் ஏன் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியபடி உள்ளார்.
டிஸ்மிஸ்கள்
இதனிடையே, மல்லையாவை, இந்தியாவிற்கு, நாடு கடத்த, இங்கிலாந்தின், உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் பிப்ரவரி 4ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து மல்லையா தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ மனு, கடந்த, ஏப்ரல் 5 ம் தேதி நீதிபதி வில்லியம் டேவிஸால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
மேல்முறையீடு
இதையடுத்துதான், எழுத்துப்பூர்வமற்ற 'ஓரல்' மேல்முறையீடு வழக்காக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் உயர்நீதிமன்றத்தின், மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார் மல்லையா. "நாளை இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் தங்கள் முடிவை சொல்லாமல் தீர்ப்பை ஒத்தி வைக்க வாய்ப்பு அதிகம். ஆனால் வாதம் சீக்கிரமே முடிந்தால், அவர்கள் நாளையே தங்கள் தீர்ப்பை வழங்க முடியும் " என்று இந்திய அதிகாரிகள் தரப்பில் ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவில் மல்லையா
கீழ் நீதிமன்றங்களில் முன்னர் கருத்தில் எடுக்கப்படாத, புதிய காரணங்கள் அல்லது ஆவணங்கள், மல்லையா தரப்பிலிருந்து வழங்கப்பட்டால், மட்டுமே, இந்த வழக்கில் அவர் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படலாம். அல்லது மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதிக்காது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு, 2018 டிசம்பரில் தீர்ப்பு வழங்கியிருந்தது நினைவிருக்கலாம். ஒருவேளை, மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டால், அடுத்த 28 நாட்களில், மல்லையாவை, இந்தியா அழைத்து வர முடியும்.