ரணகளத்திலும் ஒரு குதூகலம்... லண்டனில் விஜய் மல்லையா 3வது திருமணம்?
வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடி லண்டனில் வசித்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா 3வது திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
லண்டன் : ரூ. 9 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் 3-வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பண மோசடி, வங்கிகளை ஏமாற்றியவர் என்று கழுத்தை நெறிக்கும் சிக்கல்களில் இருக்கிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பெற்று அந்தத் தொகையை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடிவிட்டார்.
வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அவரை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கழுத்தை நெறிக்கும் பிரச்னையில் மல்லையா
கடன் பெற்றது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும்படி விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை 2 முறை சம்மன்களை அனுப்பியது. ஆனால் 2 முறையும் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த சட்ட நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கப்படலாம் என்கிற நெருக்கடியான நிலையில் இருக்கிறார் விஜய் மல்லையா.
லண்டனில் 3வது திருமணம்?
இந்நிலையில் தனது பெண் தோழி பிங்கி லால்வானியை விஜய் மல்லையா 3வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 62 வயது விஜய் மல்லையாவும், பிங்கி லால்வானியும் கடந்த 3 ஆண்டுகளாக உறவுமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. பிங்கி லால்வானி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பிங்கியும், விஜய் மல்லையாவும் தாங்கள் சேர்ந்து வாழ்வதற்கான தினத்தை கொண்டாடியதாக கூறப்படுகிறது.
பொதுஇடங்களில் மல்லையாவுடன் பிங்கி
லண்டனில் வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா ஆஜரான போதெல்லாம் பிங்கியும் அவருடன் இருந்ததாகவும் கூறப்படுகிறத. இதே போன்று மேலும் சில பொது நிகழ்ச்சிகளிலும் பிங்கி விஜய் மல்லையாவுடனே இருந்ததற்கான புகைப்படங்களும் இருப்பதாக சில உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 திருமணம், 3 வாரிசுகள்
விஜய் மல்லையா 1986-87ல் ஏர் இந்தியா விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக இருந்த சமீரா தியாப்ஜீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து 1993ல் ரேகா என்பவரை இரண்டாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். இந்த 2 திருமணங்களின் மூலம் மல்லையாவிற்கு சித்தார்த், லியான்னா, தன்யா என்ற 3 வாரிசுகள் உள்ளன.
கைதாகி ஜாமினில் விடுதலை
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டு ஏப்ரல் மாதத்தில் பெயிலில் வெளியானார். இந்தியாவிற்கு வராமல் தொடர்ந்து லண்டனிலேயே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் விஜய் மல்லையா 3வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.